2017-11-14 17:01:00

சனவரியில் தென் அமெரிக்காவின் இரு நாடுகளில் திருத்தந்தை


நவ.,14,2017. 2018ம் ஆண்டு சனவரி 15ம் தேதி முதல் 21ம்தேதி வரை, தென் அமெரிக்காவின் சிலே மற்றும் பெரு நாடுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

சனவரி 15ம்தேதி சிலே நாட்டின் சந்தியாகோவை உள்ளூர் நேரம் இரவு எட்டு மணி 10 நிமிடங்களுக்குச் சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 18ம் தேதி மாலை வரை அங்கு தங்கியிருந்து, அரசு அதிகாரிகள், அரசியல் தூதுவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், குருமட மாணவர்கள், இளையோர், நோயாளிகள், கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியோரை சந்திப்பதுடன், பொதுமக்களுக்கென திறந்தவெளி மேடைகளில் மூன்று திருப்பலிகளையும் நிறைவேற்ற உள்ளார்.

சிலே நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை முடித்து 18ம் தேதி வியாழனன்று மாலை உள்ளூர் நேரம் 5 மணி 5 நிமிடங்களுக்கு Iquique விமான நிலையத்திலிருந்து பிரியாவிடை பெற்று புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாள் பெருவின் லீமா நகரை உள்ளூர் நேரம் மாலை 5 மணி 20 நிமிடங்களுக்குச்  சென்றடைவார்.

இந்நாட்டின் அமேசான் பகுதியில் வாழும் பூர்வீகக் குடிமக்கள், அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினர், கடும்தவ துறவு மடங்களில் வாழ்வோர், திருஅவை அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரையும் சந்திக்கும் திருத்தந்தை, இங்கு இரு இடங்களில், திறந்தவெளி திருப்பலிகளையும் நிறைவேற்றுவார்.

21ம் தேதி மாலை உள்ளூர் நேரம் 6.45 மணிக்கு, லாஸ் பால்மாஸ் விமான தளத்திலிருந்து விடைபெற்று புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 22ம் தேதி பிற்பகல் உள்ளூர் நேரம் 2மணி 15 நிமிடங்களுக்கு, உரோம் நகர் வந்தடைவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.