2017-11-09 13:05:00

பாசமுள்ள பார்வையில்..வயது முதிர்ந்த தாய் கற்றுத்தரும் பாடம்


வயது முதிர்ந்த கைம்பெண்ணான அந்த அம்மா, பணம் படைத்தவர். அவரது பிள்ளைகள் அவரது பணத்திலே குறியாக இருந்தார்கள். சில நாட்களாக அவருக்கு ஒரு பிரச்சனை. அவருக்கு காது சரியாகக் கேட்கவில்லை. அவர் ஒரு சிறப்பு மருத்துவரிடம் போனார். அந்த அம்மாவின் காதில், ஒலியைக் கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்பதைக் கண்டுபிடித்தார் மருத்துவர். அந்த அம்மாவும் அதனைப் பொருத்துவதற்கு சம்மதித்தார். எனவே மருத்துவர், அவருக்கு, வெளிப்பார்வைக்குத் தெரியாமல், காதுக்குப் பின்னால், கூந்தல் மறைக்கும்படி அக்கருவி ஒன்றைப் பொருத்தினார். ஒரு வாரம் கழித்து, அந்த அம்மா பரிசோதனைக்காக அதே மருத்துவரிடம் வந்தார். ‘‘டாக்டர், அற்புதம்... என்னால எல்லாத்தையும் நல்லா கேட்க முடியுது!’’ என்றார் அந்த அம்மா. ‘‘அப்ப உங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் இதுல மகிழ்ச்சிதானே!’’ என்றார் மருத்துவர். ‘‘டாக்டர், அவங்க யார்கிட்டயும் எனக்கு இந்தக் கருவி மாட்டினதைப் பத்தி நான் சொல்லவே இல்லை. ஆனா, இந்த ஒரு வாரத்துல ரெண்டு தடவை என் உயிலை மாத்தி எழுதிட்டேன்!’’ என்று பெருமையுடன் சொன்னார் அந்த அம்மா.

ஆம். யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒருவரின் பலவீனத்தைக் கேலி செய்யக் கூடாது. அதனால் இழப்பே ஏற்படும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.