2017-11-02 14:55:00

பாசமுள்ள பார்வையில்.. நீண்ட காலம் வாழ்வதை உணர்ந்த தாய்


ஓர் ஊரில் வாழ்ந்துவந்த வீட்டுத் தலைவிக்கு, தனது குடும்பத்தினர் அனைவரும் அதிக ஆண்டுகள் வாழ வேண்டுமென்ற ஆசை. அதனால் தனது குடும்பத்தினர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற கேள்வி அவர் மனதை விடாது அரித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் அவர், நூறு வயது நிரம்பிய ஒருவரைப் பார்த்து, இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீர்களே எப்படி?’ என்று கேட்டார். அதற்கு அவர், “நான் புலால் உண்ணமாட்டேன். மதுபானம் அருந்த மாட்டேன். அதனால்தான்!” என்று பதிலளித்தார். இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, இலேசான இருமல் சத்தம் கேட்டது. இருமுவது யார்? என்று கேட்டார் அந்தத் தாய். எங்கள் அண்ணன்”என்றார் அந்த நூறாண்டு மனிதர். “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்கவேண்டுமே”என்றார் அந்தத் தாய். அவரைச் சென்றும் பார்த்தார் அந்தத் தாய். “எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று அவரிடமும் கேட்டார் அந்தத் தாய். “நான் தினமும் புலால் உண்ணுவேன், மதுபானம் அருந்துவேன்” என்றார், நூறாண்டு வயதுடையவரின் அண்ணன். அந்தத் தாய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மனதைப் போட்டுக் குழம்பிக்கொண்டிருக்கையில், அவ்வழியே சென்ற ஒருவர், நமக்கு நல்ல நேரம் என்றால், விஷம் சாப்பிட்டாலும் தப்பித்துவிடுவோம். கெட்ட நேரம் என்றால் பாலும் விஷமாகலாம், எண்ணங்களில், செயல்களில் தூய்மை முக்கியம் என்று சொல்லிக் கொண்டே போனார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.