2017-11-01 16:11:00

வத்திக்கான் தபால் துறை வெளியிடும் புதிய தபால் வில்லைகள்


நவ.01,2017. நவம்பர் 23ம் தேதி, வத்திக்கான் தபால் துறை, இரு புதிய தபால் வில்லைகளை வெளியிடும் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அக்டோபர் 31, இச்செவ்வாயன்று அறிவித்தது.

புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்கள் பிறந்ததன் 450ம் ஆண்டையும், மார்ட்டின் லூத்தர் அவர்களால் துவக்கப்பட்ட சீர்திருத்தத்தின் 500ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் வகையில் இரு வில்லைகள் வெளியிடப்பட உள்ளன.

1567ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பிறந்த புனித பிரான்சிஸ் டி சேல்ஸ், திருஅவையை காப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டவர். மறைவல்லுனர் என்று போற்றப்படும் புனித சேல்ஸ், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாவலராகவும் கருதப்படுகிறார்.

புனித அகஸ்டின் துறவு சபையைச் சேர்ந்த மார்ட்டின் லூத்தர் அவர்கள், 1517ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, விட்டன்பர்க் என்ற ஊரில், கோவில் கதவில், 95 கொள்கைகளைத் தொங்கவிட்டபோது உருவான சீர்திருத்த இயக்கம், இவ்வாண்டு, தன் 500ம் ஆண்டை சிறப்பித்து வருகிறது.

இவ்விரு நூற்றாண்டு நினைவுகளையும் சிறப்பிக்கும் வகையில் வத்திக்கான் தபால் துறை இரு தபால் வில்லைகளை வெளியிடவுள்ளது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.