2017-10-30 14:40:00

பாசமுள்ள பார்வையில்.. தாயின் ஆழ்ந்த இறை நம்பிக்கை


ஆப்ரிக்காவில் அந்தக் குடும்பம் கடும் வறுமையில் உழன்றது. அந்தக் குடும்பத்தின் தாய் கடினமாக உழைத்து குடும்பத்தைப் பராமரித்து வந்தார். ஆனால் குடும்பத்தின் வறுமைநிலை அவரது கடவுள் நம்பிக்கையை ஒருபோதும் அசைத்ததில்லை. ஒருநாள் அந்தத் தாய், உள்ளூர் வானொலி நிலையத்திற்கு, செப நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டார். அவர் தனது ஏழ்மையை, கடவுளிடம் சொல்லி உதவி கேட்டு, செபிக்கச் சொன்னார்கள் நிலையத்தார். வானொலியில் இந்த செப நிகழ்ச்சியைக் கேட்டுவரும் கடவுள் நம்பிக்கையற்ற செல்வந்தர் ஒருவர், இந்தத் தாயின் கடவுள் நம்பிக்கையை கேலிசெய்யத் திட்டமிட்டார். ஆதலால் இந்தத தாயின் முகவரியைப் பெற்றார் அவர். தனது செயலரை அழைத்து, நிறைய உணவுப்பொருள்களை வாங்கி, அந்தப் பெண்ணின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்குமாறு சொன்னார். இந்த உதவி யாரிடமிருந்து வந்தது என்று அப்பெண் கேட்டால், இது சாத்தானிடமிருந்து வந்தது என்று சொல் எனவும் சொல்லியனுப்பினார் செல்வந்தர். அன்று பொழுது சாய்ந்த நேரத்தில், அந்தச் செயலரும் உணவுப்பொருள்களைக் கொண்டுபோய் அந்தத் தாயிடம் கொடுத்தார். அந்தத் தாயும், மிகுந்த மகிழ்ச்சியோடும், நன்றியோடும் அவற்றைப் பெற்றுக் கொண்டார். பின், செயலர் அந்தத் தாயிடம், இவற்றை அனுப்பியது யார் என்று அறிவதற்கு விருப்பமில்லையா எனக் கேட்டார். அதற்கு அந்தத் தாய், இல்லை. இதை யார் அனுப்பியிருந்தாலும் அவர்களுக்கு நன்றி மட்டும் சொல்கிறேன், யார் அனுப்பியது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால், கடவுள் கட்டளையிடும்போது சாத்தான்கூட கீழ்ப்படியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று பதில் சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.