2017-10-12 15:43:00

பாசமுள்ள பார்வையில்.. பாத்திமாவின் கடைசி காட்சி


போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று ஆடுமேய்க்கும் சிறார்க்கு அன்னை மரியா காட்சியளித்து வந்தார். அக்டோபர் 13ம் தேதியன்று அக்காட்சியைப் பார்ப்பதற்காக, நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அன்று கனமழை பெய்தது. திடீரென கதிரவனின் கதிர்கள், மிகவும் ஒளிமயமாக இருந்தன. மக்கள் வியந்து பார்த்துக்கொண்டிருக்கையில், சிறுமி லூசியா அன்னை மரியிடம் பேசத் தொடங்கினார். அந்த உரையாடலில், அன்னை மரியா, தமக்கென இவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்ட வேண்டும். நான் செபமாலை அன்னை. மக்கள் ஒவ்வொரு நாளும் செபமாலை செபிக்க வேண்டும். போர் முடியும். படைவீரர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள். மக்கள் தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு, வாழ்வை திருத்தியமைக்க வேண்டும். உலகின் அமைதிக்காவும், பாவிகளின் மனமாற்றத்திற்காகவும் செபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். இந்த உரையாடல் முடிந்ததும், அன்னை மரியா கிழக்குநோக்கித் திரும்பினார். விண்ணை நோக்கி அவர் தம் கரங்களை விரித்தார். மழை நின்றது. வானம் இருளாக இருந்தது. அன்னையின் கரங்களிலிருந்து சென்ற ஒளி, கதிரவன்மீது படுவதை அந்த மூன்று சிறாரும் பார்த்தனர். அப்போது கதிரவன் மிகுந்த பிரகாசத்துடன், அங்குமிங்கும் தள்ளாடி, மக்களை நோக்கிப் பாய்ந்துவந்து மேலே சென்றது போன்ற அதிசயத்தை, அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி, அவ்விடத்திற்கு 25 மைல் தூரத்தில் இருந்த மக்களும் கண்டு வியந்தனர். அச்சிறார்க்கு அன்னை மரியா காட்சியளித்தது உண்மையென்பதற்கு, இதுவே முக்கிய சாட்சியாக அமைந்தது. அன்று இதைப் பார்த்த மக்கள், அந்த இடத்திலே தங்கள் பாவங்களுக்காக அழுது கண்ணீர் சிந்தி கடவுளிடம் மன்னிப்பை இறைஞ்சினர் என்று, அந்நிகழ்வைப் பார்த்தவர்கள் சாட்சி சொல்லியுள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.