2017-10-10 16:11:00

மியான்மார், பங்களாதேஷிக்கு திருத்தூதுப்பயண விவரங்கள்


அக்.10,2017. வருகிற நவம்பர் 26ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி வரை, மியான்மார் மற்றும், பங்களாதேஷ் நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயண விவரங்களை, இச்செவ்வாயன்று வெளியிட்டது திருப்பீடம்.

நவம்பர் 26ம் ஞாயிறு இரவு 9.40 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, மியான்மார் தலைநகர் யாங்கூனுக்குப் புறப்படும் திருத்தந்தை, நவம்பர் 27, திங்கள் பகல் 1.30 மணிக்கு யாங்கூன் சென்றடைவார்.

யாங்கூனில் நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பிற்குப்பின், 28ம் தேதி, Nay Pyi Taw செல்வார் திருத்தந்தை. அங்கு, அரசுத்தலைவர் மாளிகையில் வரவேற்பு, அரசுத்தலைவரைச் சந்தித்தல், நாட்டின் ஆலோசகர்கள் மற்றும், வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்தல், மாலை 5.15 மணிக்கு, அரசு, தூதரக மற்றும் பல அதிகாரிகளைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளை நிறைவேற்றி, யாங்கூன் சென்று பேராயர் இல்லத்தில் இரவு உணவு உண்டு உறங்கச் செல்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 29ம் தேதி யாங்கூனில் திருப்பலி, அன்று மாலையில் புத்தமதத் துறவிகளின் உயர் அவையினரைச் சந்தித்தல், ஆயர்களைச் சந்தித்தல் போன்ற பயணத் திட்டங்களை நிறைவேற்றியபின், 30ம் தேதி வியாழனன்று, யாங்கூன் பேராலயத்தில் இளையோரைச் சந்திப்பார் திருத்தந்தை.

நவம்பர் 30ம் தேதி மாலை 3 மணியளவில் பங்களாதேஷ் நாட்டின் டாக்கா செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேசிய மறைசாட்சிகள் நினைவிடத்தைப் பார்வையிடுதல், அரசுத்தலைவரைச் சந்தித்தல், அரசு, தூதரக மற்றும் பல முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளை நிறைவேற்றுவார்.

டிசம்பர் முதல் தேதி, வெள்ளிக்கிழமையன்று, Suhrawardy Udyan பூங்காவில் திருப்பலி நிறைவேற்றல், திருப்பீட தூதரகத்தில் பிரதமரைச் சந்தித்தல், ஆயர்களுக்கு உரையாற்றுதல், பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவினரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளை திருத்தந்தை நிறைவேற்றுவார்.

டிசம்பர் 2, சனிக்கிழமையன்று, TEJGAONல் புனித அன்னை தெரேசா சபையினரின் இல்லத்தைப் பார்வையிடுதல், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், குருத்துவமாணவர்கள் மற்றும் புகுமுகத் துறவிகளைச் சந்தித்தல், இளையோரைச் சந்தித்தல், பழங்காலக் கல்லறையைப் பார்வையிடுதல் போன்ற பயண நிகழ்வுகளை நிறைவேற்றியபின், உரோம் நகருக்குப் புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 2, சனிக்கிழமை இரவு 11 மணிக்கு, உரோம் சம்ப்பினோ விமான நிலையத்தில் வந்திறங்குவார் என திருப்பீடம் அறிவித்துள்ளது.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.