2017-10-07 09:16:00

பொதுக்காலம் 27ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை


அக்.07,2017.  வன்முறை என்ற சொல் ஒவ்வொரு நாளும் நமது செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் இடம்பெறும் சொல்லாக மாறிவிட்டது. நமது ஊடகங்கள் காட்டும் வன்முறைகள் நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அறியாத அளவு, நாம் வன்முறைக் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கிறோம். எனக்குத் தெரிந்த தமிழ் அறிவைக் கொண்டு, இந்த வார்த்தையைப் பதம் பிரித்துப் பார்த்தேன். அப்படி பதம் பிரித்து பொருள் காணும்போது, இந்த வார்த்தை கொஞ்சம் புதிராகத் தெரிந்தது.

வன்முறை... வன்மை + முறை. வன்மை என்பது மென்மையின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவற்றை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், இந்த வார்த்தையுடன் ஏன் 'முறை' என்ற வார்த்தையை இணைத்துள்ளோம் என்பது எனக்குப் புரியாதப் புதிராக உள்ளது.

ஆனால், நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் வன்முறை என்ற இந்த வார்த்தையின் முழு பொருளும் விளங்குமாறு பல செயல்கள் நடைபெறுகின்றன. வன்மையானச் செயல்கள் முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை வன்முறை என்று சொல்வதும் பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப் படைகள், கொலைப் படைகள், ஏதோ ஓர் அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில் பணி புரிவதுபோல், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப் போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று, வன்முறை, இப்போது விற்பனை செய்யப்படுகிறது.

வன்முறைகளின் உச்சகட்டமாக விளங்கும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் இந்நாட்களில், ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்று அறியும்போது, மனம் வேதனைப்படுகிறது. தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள் எல்லாருமே படித்தவர்கள், பட்டதாரிகள் என்று அறியும்போது மனம் இன்னும் அதிகமாக வேதனைப்படுகிறது. தாங்கள் செய்யப்போவது கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம்... ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 2ம் தேதி, நாம் கொண்டாடிவரும் காந்தி ஜெயந்தி. இந்த நல்ல நாளில் மகாத்மா காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில் மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவர் லால் பகதூர் சாஸ்திரியும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ் அவர்கள் இறந்த நாள். இந்த மூன்று தலைவர்களை நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில் நானும் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அரசியல் என்ற சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று அரசியல் என்றதும் அராஜகம், அடாவடித்தனம், வன்முறை, இவையே இச்சொல்லுக்கு இலக்கணமாகி வருவது வேதனையைத் தருகிறது.

1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும் உலகம் முழுவதும் அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்று அறிகிறோம். வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம். வன்முறையைப் பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம்.

வன்முறையைப் பற்றி இன்று எண்ணிப்பார்க்க மற்றொரு காரணம் நமக்கு இன்று தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் எசாயா மற்றும் மத்தேயு நற்செய்தி இரண்டிலும் திராட்சைத் தோட்டம் ஒன்றை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்க முடியும்.

ஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு எதிராக, அத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள் திட்டமிட்டு செய்யும் வன்முறைகளை நற்செய்தியில் இயேசு கூறியுள்ளார். கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்குக் கிடைக்கும் பதில்கள் அநீதியானவை. திராட்சைத் தோட்டத் தொழிலாளிகள் செய்ததாக நாம் நற்செய்தியில் வாசிக்கும் வரிகள் இவை:

மத்தேயு நற்செய்தி 21: 35-36

தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள்,  ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, எதோ ஒரு தினசரி செய்தித்தாளை வாசிக்கும் உணர்வு எனக்குள் மேலோங்கியது. நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வன்முறைகளைத் திட்டமிடும் பல தலைவர்களை நினைத்துப் பார்க்க வைத்தது. மக்களின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்கும் பல அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள்தான் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்கவேண்டியவர்கள் என்பதையும், சிறிதும் எண்ணிப் பார்க்காமல், எதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தனக்குரிய பொருள்கள் என்பதுபோல் அவர்கள் செயல்படும் போக்கு, பல நாடுகளில் வளர்ந்துவருவதை, இந்த உவமை எனக்கு நினைவுறுத்தியது. பொறுப்புக்களை மறந்து செயல்படும் தலைவர்களுக்கு அப்பொறுப்புக்களைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். இவ்வாண்டு, செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூருவில் கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் உருவாகும் வன்முறை, இன்றைய வாசகங்கள் தரும் ஒரு கோணம்.

மற்றொரு கோணம் நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே இந்த உலகில் குத்தகைக்காரர்கள். இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து, அல்லது வேண்டுமென்றே மறுத்து, நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத் தோட்டமாக இந்த உலகை இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.

இறைவாக்கினர் எசாயா 5:1-2

செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்:... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். மாறாக, காட்டுப்பழங்களையே அது தந்தது.

இறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்து வருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவ்வப்போது இயற்கைப் பேரழிவுகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இருந்தாலும், நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை.

பழங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் இறைவனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த வரிகளை வாசிக்கும்போது, நம் குடும்பங்களில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பல திட்டங்கள், கனவுகளோடு பல்வேறு பாடுகள் பட்டு நாம் வளர்க்கும் குழந்தைகள், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறு வழிகளில் செல்லும்போது, ஒவ்வொரு பெற்றோரும் படும் வேதனைகளை, இறைவனின் வேதனைகளாக, இறைவாக்கினர் எசாயா வர்ணித்துள்ளார். நம் குடும்பங்களில், இனிய சுவையுள்ள, நல்ல பழங்கள் தரும் கொடிகளாய் நம் குழந்தைகள் வளர வேண்டும் என்று, சிறப்பாக மன்றாடுவோம்.

மனித குலத்திற்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் எதிராக நாம் செய்யும் பல வன்முறைகளைப் பற்றியும், நற்கனிகளைத் தராமல் நம்மைச் சங்கடப்படுத்தும் நம் குழந்தைகளையும் பற்றி விரிவாகச் சிந்தித்ததால் நொந்து போன உள்ளத்துடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வதா என்று நான் தயங்கியபோது, இன்றைய இரண்டாம் வாசகம் எனக்கு ஆறுதலான, உற்சாகமூட்டும் எண்ணங்களைத் தந்தது. புனித பவுல் அடியார் பிலிப்பியருக்கு எழுதிய வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 6-9

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்... அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்... சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.