2017-10-07 14:53:00

அக்டோபர் 9ல் வத்திக்கானில் ஜெர்மன் அரசுத்தலைவர் Steinmeier


அக்.07,2017. அக்டோபர் 09, வருகிற திங்களன்று, ஜெர்மன் நாட்டு அரசுத்தலைவர் Frank Walter Steinmeier அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்திப்பார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையை சந்தித்தபின், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பைத் தோற்றுவித்த  Andrea Riccardi, அவ்வமைப்பின் தலைவர் Marco Impagliazzo மற்றும் அவ்வமைப்பின் ஏனைய  பொறுப்பாளர்களையும், ஜெர்மன் அரசுத்தலைவர் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஒன்றிணைப்பு, புலம்பெயர்ந்தவர், ஏழ்மை ஆகிய விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உரோம் நகரில், அக்டோபர் 04, இப்புதனன்று தொடங்கியுள்ள, திருஅவை சட்டத்தின் 16வது உலக மாநாட்டிற்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1917ம் ஆண்டு மே 27ம் தேதியன்று, திருஅவை சட்டம் முதலில் வெளியிடப்பட்டதன் நூறாம் ஆண்டையொட்டி, இந்த உலக மாநாடு நடைபெறுகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1983ம் ஆண்டு சனவரி 25ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், Sacrae disciplinae leges என்ற திருத்தூது அறிக்கை மூலம்,  இலத்தீன் வழிபாட்டுமுறைக்கு அறிவித்த புதிய சட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப்பின், திருஅவை சட்டங்களில் மாற்றங்கள்

ஏற்பட்டுள்ளன என்றும், இறைமக்களின் அன்றாட வாழ்வில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் போதனைகள் இடம்பெற வழியமைப்பதாய் சட்டங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறினார், திருத்தந்தை. 

திருமணத்தைச் செல்லாததாக ஆக்குவது குறித்த திருஅவையின் நடைமுறைகளில் தன் இரு அண்மை motu proprio அறிக்கைகள் வழியாக சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 07, இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இம்மாநாட்டின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழியாக, திருத்தந்தையின் இச்செய்தி அனுப்பப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.