2017-09-22 16:40:00

‘போர்க்கள மருத்துவமனை’யாக பங்களாதேஷ் தலத்திருஅவை...


செப்.22,2017. பங்களாதேஷ் நாட்டிலுள்ள தலத்திருஅவை, போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனைபோல் செயலாற்ற அழைக்கப்பட்டுள்ளது என்று, அந்நாட்டின் கர்தினால், பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டிலிருந்து வெளியேறும் ரோஹிங்கியா இனத்தவர், பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுந்துவரும் சூழலில், டாக்கா பேராயர், கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், இப்பிரச்சனையில், பிறரன்பு, அனைத்திற்கும் மேலான ஒரு தீர்வாக அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதுவரை, மியான்மாரிலிருந்து 4,20,000த்திற்கும் அதிகமான ரோஹிங்கியா இனத்தவர், பங்களாதேஷ் நாட்டிற்குள் வந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு காரித்தாஸ் வழியே உதவிகள் செய்யும் திட்டங்களை தலத்திருஅவை வகுத்து வருகிறது என்றும், கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

துன்புறும் ரோஹிங்கியா மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்து வரும் விண்ணப்பங்களுக்கு நன்றி சொல்வதாகக் கூறிய கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், திருஅவையை, 'போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை' என்று திருத்தந்தை உருவகித்துப் பேசியது, தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு மிகப் பொருத்தமாக உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.