2017-09-14 16:43:00

விடுதலை செய்யப்பட்ட அருள்பணி டாம் திருத்தந்தையை சந்தித்தார்


செப்.14,2017. “திருச்சிலுவையில் நம் நம்பிக்கை புதுப்பிறப்பெடுக்கின்றது. சிலுவையில் பிறந்த நம்பிக்கை, உலகம் தருகின்ற நம்பிக்கையிலிருந்து மாறுபட்டது. ஏனென்றால், இந்நம்பிக்கை, இயேசுவின் மீதுள்ள அன்பினால் பிறப்பது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வியாழனன்று வெளியாயின.

செப்டம்பர் 14, இவ்வியாழனன்று திருச்சிலுவையின் மகிமை விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தையும் தனது டுவிட்டரில், இயேசுவின் திருச்சிலுவை குறித்த சிந்தனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும், கடந்த 18 மாதங்களாக இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருந்த, இந்திய அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், தான் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே, வத்திக்கானில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஆசீர் பெற்றார்.

இப்புதன் பொதுமறைக்கல்வியுரையை நிறைவுசெய்து, வத்திக்கானில் தான் தங்கியிருக்கின்ற சாந்தா மார்த்தா இல்லம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்தில் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களைச் சந்தித்தார்.

இச்சந்திப்பில் திருத்தந்தையின் காலடிகளை முத்தமிட்ட அருள்பணி டாம் அவர்கள், தான் பிணையல் கைதியாக இருந்த காலம் முழுவதும், தான் எதிர்கொண்ட துன்பங்களை, திருத்தந்தை மற்றும் திருஅவையின் நலனுக்காக அர்ப்பணித்ததாக, திருத்தந்தையிடம் தெரிவித்தார். திருத்தந்தையும், அருள்பணி டாம் அவர்களின் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீரளித்தார்.

அருள்பணி டாம் அவர்கள் விடுதலையடைந்துள்ளதையொட்டி, இந்தியத் திருஅவையும், நன்றித் திருப்பலிகளை நிறைவேற்றின. 

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமன் நாட்டின் ஏடனில், புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்திலிருந்து கடத்தப்பட்ட சலேசிய சபை அருள்பணி டாம் அவர்கள், செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார். இவர் ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து உரோம் திரும்பினார்.

இவ்விடுதலை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஓமன் நாட்டு Ona செய்தி நிறுவனம், வத்திக்கானின் வேண்டுகோள் மற்றும், ஓமன் நாட்டு சுல்தான் Qabus அவர்களின் வழிகாட்டுதல்களின்படி, மஸ்கட்டிலுள்ள அதிகாரிகள், ஏமன் நாட்டினர் சிலரின் ஒத்துழைப்புடன், அருள்பணி டாம் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவர் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு உதவினர் என்று அறிவித்துள்ளது.

57 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், ஏமனில் மறைப்பணியாற்றி வந்தார். இவர் மறைப்பணியாற்றிய பங்கு ஆலயம், குண்டுவீச்சால் சேதமடைந்ததையொட்டி, ஏடனில், அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்தில் தங்கி மறைப்பணியாற்றி வந்தார்.  இஸ்லாம் தீவிரவாதிகள், 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, அந்த முதியோர் இல்லத்தைத் தாக்கியதில் அன்னை தெரேசா சபையின் நான்கு அருள்சகோதரிகள் மற்றும் 12 பேர் கொல்லப்பட்டனர். அச்சமயம் இவரும் கடத்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.