2017-09-02 15:26:00

பொதுக்காலம் 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வெளியிட்ட திருமடல்களில், “Mater et Magistra” என்ற மடல், புகழ்பெற்ற ஒரு மடல். சமுதாயப் பிரச்சனைகள் பெருகிவந்த இவ்வுலகில், திருஅவை ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவது “Mater et Magistra”, அதாவது, "அன்னையும் ஆசிரியரும்" என்ற அந்த திருமடல். அம்மடல் வெளியான ஒரு சில வாரங்களில், ஒரு கத்தோலிக்க எழுத்தாளர், பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் தலைப்பு: "அன்னை... வேண்டும்; ஆசிரியர்...வேண்டாம்" (“Mater sí, Magistra no!”) என்று அமைந்திருந்தது.

அளவுகடந்த அன்பைப் பொழியும் அன்னையாக திருஅவையை உருவகித்துப் பார்க்கையில் மனம் குளிர்கிறது. ஆனால், கண்டிப்புடன் பாடங்கள் புகட்டும் ஆசிரியராக திருஅவையை எண்ணிப்பார்க்கையில் கசக்கிறது. காயப்பட்ட வேளைகளில், அன்னையின் அணைப்பை உணர்வதற்கு, நாம், கோவிலையும், திருஅவையின் பணியாளர்களையும் நாடிச் சென்றுள்ளோம். ஆனால், காயப்பட்டதற்குக் காரணம் நாம்தான் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியராக, திருஅவை மாறியபோது, அந்தக் கண்டிப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

'அன்னை' என்ற இலக்கணத்தில், 'ஆசிரியர்' என்ற அம்சமும் இணைந்துள்ளது. எந்த ஓர் அன்னையும் தன் குழந்தைக்கு அளவுகடந்த அன்பை மட்டுமே எந்நேரமும் பொழிந்தால், அக்குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு அந்த அன்பே ஒரு தடையாக அமையும். தவறும்போது, தடுமாறும்போது அக்குழந்தைக்குத் தகுந்த வழியைக் காட்டுவதும் அன்னையின் பொறுப்பு. அவ்வேளைகளில், கரிசனை கலந்த கண்டிப்புடன் செயலாற்றும் ஓர் ஆசிரியராக அன்னை மாறவேண்டும்.

சென்ற ஞாயிறு, அன்னையாக விளங்கிய இயேசு, இந்த ஞாயிறு ஆசிரியராக மாறுகிறார். 'நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?' என்று கேட்ட இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்ற உயர்ந்ததொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டார் பேதுரு. இயேசு அவரிடம், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” என்று உறுதிமொழி வழங்கினார்.

இது நடந்து ஒரு சில நிமிடங்களில், “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்” என்று இயேசு, பேதுருவை, அனல் தெறிக்கும் வார்த்தைகளில் கடிந்துகொண்டார். இயேசுவின் உறுதிமொழிகளைக் கேட்டு, பல்லக்கில் பவனிவந்ததுபோல் உணர்ந்த பேதுரு, அடுத்த சில நிமிடங்களில், அத்தனை கடுமையான சொற்களைக் கேட்டு, படுகுழியில் விழுந்ததைப்போல் உணர்ந்திருப்பார்.

பல்லக்கில் மிதந்ததற்கும், படுகுழியில் விழுந்ததற்கும் பேதுருவே காரணமாகிறார். இயேசுவை, 'மெசியா' என்று அறிக்கையிடுவதில் பெருமை அடைந்தார் பேதுரு. 'மெசியா' என்ற சொல்லுக்கு, 'அர்ச்சிக்கப்பட்டவர்' அல்லது, 'அருள்பொழிவு செய்யப்பட்டவர்' என்பது பொருள். இஸ்ரயேல் அரசர்கள் அனைவரும், அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பதை பேதுரு நன்கு அறிந்தவர். எனவே, அவர் இயேசுவை 'மெசியா' என்று அறிக்கையிட்டபோது, அவர் விரைவில் ஓர் அரசனாக அருள்பொழிவு பெறுவார், அதுவும், தாங்கள் எருசலேம் நகரில் நுழைந்ததும், இயேசு அரியணை ஏறுவார் என்ற எண்ணங்கள், பேதுருவின் உள்ளத்தை நிறைத்திருக்கலாம்.

அந்நேரத்தில், அங்கு ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது. இயேசு, தான் எப்படிப்பட்ட 'மெசியா' என்பதையும், தனக்கு எருசலேமில் காத்திருக்கும் வரவேற்பைப் பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறார்:

மத்தேயு நற்செய்தி 16: 21

இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.

என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது.

இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத பேதுரு, நடைமுறை வாழ்வுக்கு ஏற்ற சில அறிவுரைகளை தர விழைகிறார். இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்ற ஆதங்கத்தில் பேதுரு கூறிய அறிவுரைகளுக்கு, இயேசுவின் பதில், கோபமான சொற்களில் வெளிவந்தது. தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பேதுருவை, இயேசு 'சாத்தானே' என்றழைப்பது, நம்மில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.

தன் பணிவாழ்வின் துவக்கத்தில், இயேசு, பாலை நிலத்தில், சாத்தானைச் சந்தித்தார். பணிவாழ்வின் இறுதிக் கட்டத்தில், அவர் எருசலேமை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தன் நெருங்கிய நண்பர் பேதுரு வழியே மீண்டும் சோதனையைச் சந்திக்கிறார்.

பாலை நிலத்தில் சாத்தான் தந்த மூன்று சோதனைகளையும், மேலோட்டமாகப் பார்த்தால், அவை ‘நல்ல’ சோதனைகளாகவே தெரிகின்றன. கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை. குறுக்கு வழிகள், எளிதான வழிகள், உலகோடு சமரசம் செய்துகொள்ளும் வழிகள் இவையே சோதனையாக வந்தன.

பேதுரு இயேசுவுக்கு வழங்கிய அறிவுரையும் தவறான அறிவுரை அல்ல. இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன், ஆதங்கத்துடன் பேதுரு கூறிய அறிவுரை அது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், "இயேசுவே, நீர் ஏன் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளவேண்டும்? உலகத்தோடு ஒத்துப்போக வேண்டியதுதானே!" என்ற பாணியில் பேதுரு அறிவுரை வழங்கினார்.

நமக்கு வரும் சோதனைகளும் இப்படிப்பட்டவையே. கொலைசெய்யவோ, கொள்ளையடிக்கவோ, ஊழலில் ஊறிப் போகவோ நமக்குச் சோதனைகள் வருவதில்லை. உலகத்தோடு ஒத்துப்போவது, எளிய வழிகளை, குறுக்கு வழிகளைத் தேடுவது, அங்கும், இங்கும் சிறிது 'அட்ஜஸ்ட்' செய்து, அநீதிகளோடு சமரசம் செய்துகொள்வது என்பவையே, பெரும்பாலான நேரங்களில் நமக்கு வரும் சோதனைகள். அதுவும், நமக்கு நெருங்கியவர்களிடமிருந்து இச்சோதனைகள் வரும்போது, அவை, இன்னும் சிக்கலாக மாறிவிடுகின்றன. அவர்கள் நம்முடைய நன்மைக்காகத்தானே சொல்கிறார்கள் என்ற போராட்டம் எழுகின்றது.

உண்மையான நீதி, அமைதி, அன்பு ஆகிய உயரிய சிகரங்களை அடைய, குறுக்கு வழிகளோ, எளிதான பாதைகளோ கிடையாது. கடினமானப் பாதைகளில், தனித்துச் செல்லும் பயணங்கள் இவை. கிறிஸ்தவ விழுமியங்கள் அடங்கிய கருத்துக்களை வழங்கியுள்ள ஸிக் ஸிக்லர் (Zig Ziglar) என்ற புகழ்பெற்ற பேச்சாளர், இதே கருத்தை வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "மற்றவர்கள் அனைவரும் கூட்டமாக 'லிப்ட்'டைத் தேர்ந்தெடுக்கும்போது, நீ தனியாக அந்தச் சுழற்படியில் பயணம் செய்யவேண்டியிருக்கும்." இதைதான் இயேசுவும் ஒரு முறை, "வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே" (மத்தேயு 7:13-14) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

இத்தகையதொரு வாயிலை, வழியை, பயணத்தை இயேசு மேற்கொண்டார். அவரைப் பின்பற்ற விழைவோருக்கும் இத்தகையப் பயணமே காத்திருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறுகிறார்:

மத்தேயு நற்செய்தி 16: 24-25

பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்” என்றார்.

இயேசு காட்டிய இந்தக் கடினமான வாழ்வுப்பாதையைத் தேர்ந்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் ஒருவராக நாம் கிளென் கன்னிங்ஹாம் (Glen Cunningham) என்ற இளையவரை நினைத்துப் பார்க்கலாம். கிளென்னுக்கு 8 வயதானபோது ஏற்பட்ட ஒரு தீ விபத்தில், அவரது இரு கால்களும் பெருமளவு எரிந்துபோயின. கிளென் மீண்டும் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால், கிளென், விடாமுயற்சியுடன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல, 1932, 1936 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில், நீண்ட தூரம் ஓடும் பந்தயங்களில் பதக்கங்களை வென்றார். உலக சாதனைகளை உருவாக்கினார்.

அவர் தன் வாழ்வின் பிற்பகுதியில், இளையோருக்கு, குறிப்பாக, பிரச்சனைகளில் சிக்கிய இளையோருக்கு, அதிக உதவிகள் செய்துவந்தார். அவரது மனைவி ரூத், அவரிடம், "கிளென், வேறு யாரும் இதுபோல் செய்வதில்லை. நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, கிளென் தன் மனைவியிடம், "என் அன்பு ரூத், அதுதான் ஒரே காரணம். இதை யாரும் செய்யாததால், நான் செய்கிறேன்" என்று பதில் கூறினார்.

யாரும் செய்யத்துணியாத, அல்லது, செய்யத் தயங்கிய பணிகளை ஆற்ற இறைவன் இறைவாக்கினர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதைத் துணிவுடன் எடுத்துச்சொல்லும் பணியை இறைவன் அவர்களுக்கு அளித்தார். பழைய ஏற்பாட்டுக் காலமானாலும், புதிய ஏற்பாட்டுக் காலமானாலும், நாம் வாழும் இன்றையக் காலமானாலும் சரி... சமுதாயம் சரியில்லை என்றும், அதைச் சரிசெய்ய என்னென்ன செய்யவேண்டும் என்றும், இறைவாக்கினர் கூறிவரும் உண்மைகள், அடிமைப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கும் மக்களை நம்பிக்கையில் நிறைத்துள்ளன. அதே நேரம், இறைவாக்கினர்கள் சொல்பவை, ஆளும் வர்க்கத்தை, அதிகாரத்தில் இருப்போரை அச்சுறுத்தி, ஆட்டிப் படைத்துள்ளன.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும்வரை இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்தி வந்த இறைவனிடம், இறைவாக்கினர் எரேமியா பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் இப்படி நாம் கேட்கிறோம்.

இறைவாக்கினர் எரேமியா 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது. ‘ஏன் எனக்கு வம்பு’ என்று பேசாமல் இருந்தாலும், உமது வார்த்தைகள், என் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவைப் போல, பல கோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.

மனதுக்குச் சங்கடமான உண்மைகள் வெளிப்படும்போது, உண்மையைச் சந்திக்க மறுத்து, நாம் ஓடி ஒளியலாம். அல்லது, அந்த உண்மையைச் சொன்னதால், உயிர் துறக்கலாம். இதையே இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார். ஒரு கேள்வியின் வடிவில் இயேசு விடுத்த இந்தச் சவாலை, இலொயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சேவியரிடம் கூறி அவரை விழித்தெழச் செய்தார். இதோ இயேசு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அந்த உன்னத சவால்:

மத்தேயு நற்செய்தி 16: 26

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

இவ்வுலகில் நீதி தழைக்கவேண்டும் என்று கனவு காணும் இறைவாக்கினர்கள் நம் மத்தியில் பிறக்கவேண்டும்... அந்தக் கனவை நனவாக்க, உண்மைகளை எடுத்துக்கூறும் இறைவாக்கினர்கள் நம் மத்தியில் இன்னும் பெருக வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

இறைவாக்கினராக வாழ, இயேசுவுடன் சிலுவையைச் சுமந்து செல்ல, ஒவ்வொருநாளும் பல வடிவங்களில் நமக்கு வரும் அழைப்புக்களை ஏற்க, இறைவன் நமக்கு அருளையும், துணிவையும் வழங்குவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.