2017-08-28 16:33:00

இந்திய திருஅவைக்கு துணை அரசுத் தலைவரின் பாராட்டு


ஆக.28,2017. கத்தோலிக்கர்களின் பணிகளைப் பாராட்டுவதாகவும், இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளதற்கு, வாக்குகளுக்காக மதத்தைப் பயன்படுத்தும் சில அரசியல்வாதிகளே காரணம் எனவும் அறிவித்துள்ளார், இந்தியத் துணை அரசுத்தலைவர், வெங்கையா நாயுடு.

இந்திய ஆயர்கள் பேரவையின் ஏற்பாட்டின்பேரில் டெல்லி பேராயர் அனில் கூட்டோ, ஆயர் பேரவைப் பொதுச்செயலர் ஆயர் தெயோடோர் மஸ்கரேனாஸ், மற்றும், எட்டு தலத்திருஅவைப் பிரதிநிதிகள் இணைந்து, இந்தியத் துணை அரசுத்தலைவரை சந்தித்து, அவர் பதவியேற்புக்கு வாழ்த்து தெரிவித்தபோது, இவ்வாறு கூறினார் துணை அரசுத்தலைவர் வெங்கையா நாயுடு.

இந்தியாவில் திருஅவையின் பணிகளைப் பாராட்டிய துணை அரசுத் தலைவர், கிறிஸ்தவ சமூகம் அமைதியை விரும்பும் ஒரு சமூகம் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு அது மிகப்பெரும் பங்காற்றியுள்ளது எனவும் கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சகிப்பற்றத்தன்மைகள் இடம்பெற்றுவருவதைப் பற்றி கத்தோலிக்கப் பிரதிநிதிகள், துணை அரசுத்தலைவரிடம் குறிப்பிட்டபோது, இது குறித்து நாட்டுத் தலைவர்களின் கவனத்திற்கு தான் கொண்டுச்செல்ல உள்ளதாகவும் உறுதியளித்தார், இந்தியத் துணை அரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. 

ஆதாரம் : AsisNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.