2017-08-26 12:57:00

பாசமுள்ள பார்வையில்: அடக்கி ஆள்வதற்கு அல்ல, பணி செய்வதற்கே


2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ நகரில் திருத்தந்தை கலந்துகொண்ட உலக இளையோர் நாள் நிகழ்வை பின்னணியாக வைத்து, நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு திருத்தந்தை அளித்த பதிலும், இதோ:

நிருபர்: ரியோ நகரில் கூடியிருந்தோர், 'பிரான்செஸ்கோ, பிரான்செஸ்கோ' என்று கத்தியபோது, நீங்கள் அவர்களிடம் 'கிறிஸ்து, கிறிஸ்து' என்று கத்தச் சொன்னீர்கள். இவ்வளவு புகழை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? இவ்வளவு புகழுடன் எவ்வாறு வாழ்கிறீர்கள்?

திருத்தந்தை: இதற்கு எவ்விதம் பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் இவ்வளவு மகிழ்வுடன் இருப்பதைக் கண்டு, நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மக்களின் தாராளமனதைக் கண்டு மகிழ்கிறேன். அவர்களுக்கு இறைவன் மிக நல்லவற்றையே செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். ஆழ்மனதில், என் பாவங்கள், தவறுகள், இவற்றை நான் எண்ணிப்பார்க்க முயல்கிறேன். நான் முக்கியமானவன் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.

இந்த புகழ், ஆரவாரம் அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப் பின், நான் என் தந்தையின் இல்லம் செல்வேன் என்று தெரியும். இவற்றை (மக்களின் புகழ்ச்சியை) அதிகம் நம்பாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

அதிகாரத்தில் இருக்கும் ஒரு தலைவர், எவ்விதம் சிந்தித்து, செயல்பட்டு, வாழவேண்டும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை, யாரும் மறுக்கமுடியாது. ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணி செய்வதற்கே என்பதை, தான் திருஅவை தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.