2017-08-25 15:26:00

தென் சூடானின் அமைதிக்கு கத்தோலிக்க திருஅவை தொடர்ந்து அழைப்பு


ஆக.25,2017. தென் சூடானில் இடம்பெறும் உள்நாட்டுச் சண்டை மற்றும், பஞ்சத்தால், அந்நாட்டு மக்கள், சூடானுக்கும், உகாண்டாவுக்கும் இலட்சக்கணக்கில் புலம்பெயர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென கத்தோலிக்க திருஅவை தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றது.

தென் சூடானில் போர் நிறுத்தம் இடம்பெற வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆதரவுடன், திருஅவைகள் தொடர்ந்து எழுப்பிவரும் விண்ணப்பங்களுக்கு, போரிடும் குழுக்கள் இதுவரை செவிமடுக்கவில்லையென செய்திகள் குறை கூறியுள்ளன.

கடந்த பிப்ரவரி 26ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஆங்லிக்கன் ஆலயத்திற்குச் சென்றபோது, ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களுடன், தென் சூடானைப் பார்வையிடுவதற்கு விருப்பம் தெரிவித்தார்.

தென் சூடான் சுதந்திர தினத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு தினத்தில், சூடான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Edward Hiiboro Kussala அவர்கள், முழு போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஆயினும், தென் சூடானில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதால், மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, திருஅவை கவலை தெரிவித்துள்ளது.

சூடான் நாட்டுக்குப் புலம்பெயர்ந்துள்ள 13 இலட்சம் தென் சூடான் மக்கள் உட்பட, சூடானிலுள்ள மொத்த புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சமாக உயர்ந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.   

தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir, முன்னாள் உதவி அரசுத்தலைவர் Riek Machar ஆகிய இருவரின் இனக்குழுக்களின் ஆதரவோடு நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையால் நாடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதோடு, அந்நாட்டில் கடும் பஞ்சமும், பொருளாதார நெருக்கடியும் நிலவுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.