2017-08-24 14:56:00

பாசமுள்ள பார்வையில்.. கர்ப்பிணி தாய்மார்க்கு இலவச சேவை


ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று, கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்டோ இலவசம் என்று அறிவித்து, ஒரு மகத்தான சேவையை ஆற்றியிருக்கிறார், ஆட்டோ ஓட்டுனர் ஒருவர். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் இளைஞர் சுகுமார் அவர்கள், இந்திய சுதந்திர தினத்தன்று ஏதாவது ஒரு சமூக சேவையில் ஈடுபட முடிவெடுத்தார். அதன்படி ஆகஸ்ட் 15, செவ்வாய்க்கிழமை (15.08.2017), காலை, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த சுகுமார் அவர்கள், ‘கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் ஆட்டோ இலவசமாக இயக்கப்படும்’ என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அன்று காலை ஆறு மணி முதல், அடுத்த நாள் காலை ஆறு மணி வரையிலான 24 மணி நேரத்தில், மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண்களை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு, தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்றார் சுகுமார். இது குறித்து சுகுமார் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில் ஏதாவது சமூக சேவை செய்ய விரும்பினேன். அதன்படி ஒருநாள் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களை இலவசமாக, அவர்கள் வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து செல்ல முடிவு எடுத்தேன்”என்றார். ஆட்டோ ஓட்டுனர் சுகுமார் அவர்களுக்கு, மருத்துவமனைக்கு வந்த நோயாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு உதவிய சுகுமார் வாழ்க! இத்தகைய சுகுமார்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கட்டும். அன்னைக்கு உதவாதவர், வேறு யாருக்கும் உதவமாட்டார் என்பது தமிழ் பழமொழி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.