2017-08-22 14:11:00

பாசமுள்ள பார்வையில் – துன்பங்களில் பங்கேற்கும் அன்னை மரியா


பல நூற்றாண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையில், இரு இதயங்கள், மக்களின் வணக்கத்தைப் பெற்று வந்துள்ளன - இயேசுவின் திரு இதயம், மரியாவின் மாசற்ற இதயம். முள்ளால் சூழப்பட்டு, கொழுந்துவிட்டெரியும் இதயமாக, இயேசுவின் திரு இதயமும், வாளால் ஊடுருவப்பட்டு, மலர்களால் சூழப்பட்டு, பற்றியெரியும் இதயமாக, மரியாவின் மாசற்ற இதயமும், மக்களின் வணக்கத்தைப் பெற்றுள்ளன.

அன்னை மரியாவும், யோசேப்பும், இயேசுவை, கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்ற வேளையில், அங்கு வந்த முதியவர் சிமியோன், அன்னை மரியாவைப் பார்த்து, "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2: 35) என்று கூறியதையும், மரியன்னை, தன் வாழ்வில் அனுபவித்த ஏழு துயர்நிறை தருணங்களை நினைவுறுத்தவும், வாள் ஊடுருவிய இதயமாக, மரியன்னையின் இதயம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சிமியோன் சொன்ன கடினமான கூற்று, குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தப்பித்துச்சென்றது, சிறுவன் இயேசு, எருசலேம் திருவிழாவில் காணாமற்போனது, சிலுவை சுமந்து சென்ற இயேசுவைச் சந்தித்தது, சிலுவையில் அறையப்பட்டு துடித்த இயேசுவைக் கண்டது, இறந்த இயேசுவை மடியில் கிடத்தி அழுதது, இயேசுவை அடக்கம் செய்தது என்று, ஏழு கொடுமைகளை மரியா தன் இதயத்தில் தாங்கி நின்றார் என்பதை, அவர் இதயத்தில் பாய்ந்து நிற்கும் ஏழு வாள்கள் காட்டுகின்றன.

புலம்பெயர்வோர், குழந்தைகளைத் தொலைத்துவிட்டு துன்புறுவோர், காவல்துறையாலும், வன்முறை கும்பல்களாலும், தன் மகனோ, மகளோ, துன்புறுத்தப்படுவதைக் காண்போர், இளம் வயதில் இறந்துபோகும் மகனையோ, மகளையோ அடக்கம் செய்வோர் என்று... பெற்றோர், துயருறும் தருணங்களில், மரியன்னை, அவர்களது துன்பங்களில் பங்கேற்கிறார்.

மரியாவின் மாசற்ற இதயத் திருவிழா, பல ஆண்டுகளாக, ஆகஸ்ட் 22ம் தேதி, கொண்டாடப்பட்டது. தற்போது, இத்திருவிழா, இயேசுவின் திரு இதயத் திருவிழாவைத் தொடர்ந்துவரும் சனிக்கிழமையில் சிறப்பிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி விண்ணேற்படைந்த மரியன்னை, அரசியாக முடிசூட்டப்பட்டத் திருவிழா, ஆகஸ்ட் 22ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.