2017-08-21 14:32:00

பாசமுள்ள பார்வையில்.. பாட்டி கற்றுக்கொடுத்த பாடம்


அந்த ஊரில் பணம் படைத்த பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சில நாள்களாக ஒரு பிரச்சனை. காது சரியாகக் கேட்கவில்லை. அதனால் அவர், ஒரு சிறப்பு மருத்துவரிடம் சென்றார். பாட்டியைப் பரிசோதித்த மருத்துவர், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினால் பிரச்சனை சரியாகிவிடும் என்று ஆலோசனை சொன்னார். பாட்டியும் சரி என்று சொல்ல, பாட்டியின் காதுக்குப் பின்னால், தலைமுடி மறைக்கும்படி, வெளியில் பார்ப்பவர்களுக்குத் தெரியாமல், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினார் மருத்துவர். ஒரு வாரம் சென்று, பாட்டி பரிசோதனைக்காக அதே மருத்துவரிடம் வந்தார். ‘‘டாக்டர், என்ன அற்புதம்... என்னால எல்லாத்தையும் நல்லா கேட்க முடியுது! என்று மகிழ்ச்சியோடு சொன்னார் பாட்டி. அதற்கு மருத்துவர், ’’அப்ப.. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் இதுல மகிழ்ச்சிதானே!’’ என்று கேட்டார். அப்போது பாட்டி, ‘‘டாக்டர், அவங்க யார்கிட்டயும் காது கேட்கும் கருவி எனக்கு மாட்டியிருப்பதைப் பத்தி நான் சொல்லவே இல்லை. ஆனா, இந்த ஒரு வாரத்துல ரெண்டு தடவை என் உயிலை மாத்தி எழுதிட்டேன்!’’ என்று உற்சாகமாகச் சொன்னார்.

ஆம். வயதான பாட்டிதானே, அவருக்கு காது கேட்காது, கண் தெரியாது என, ஒருவரின் பலவீனத்தை எவரும் கேலி செய்யக் கூடாது. அதனால் இழப்பே நேரிடும். எந்த மனிதரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.