2017-08-18 15:52:00

பார்சலோனா தாக்குதலுக்கு, இஸ்பெயின்,அமெரிக்க ஆயர்கள் கண்டனம்


ஆக.18,2017. இவ்வியாழனன்று பார்சலோனா நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, இஸ்பானிய ஆயர்கள் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவை செயலர், ஆயர் José Gil Tamayo அவர்கள், ஆயர்களின் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

இன்னும், இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் தலைவர் ஆயர், Oscar Cantu of Las Cruces அவர்கள், அப்பாவி பொது மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல், முழுவதும் அறிவற்ற செயல் என்று கூறியுள்ளார்.

இன்னும், இப்பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், பயங்கரவாதத்திற்கும், வன்முறைமிக்க தீவிரவாதத்திற்கும் எதிரான இஸ்பெயின் நாட்டினரின் நடவடிக்கைகளில், ஐ.நா. நிறுவனம் ஆதரவு வழங்கும் எனக் கூறியுள்ளார்.

பார்சலோனா நகரில் நடந்த இத்தாக்குதலையடுத்து, காவல்துறைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன.

18 வயது நிரம்பிய ஓர் இளைஞனால் நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு, ஐ.எஸ். இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.