2017-08-18 16:37:00

பாசமுள்ள பார்வையில் : தமிழ் மீது அவ்வையின் தாய்மையுணர்வு


ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றியது. உடனே, தன் அரண்மனைப் புலவர்கள் அனைவரையும் அழைத்து, அடுத்த நாள் காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்கு கோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தை கலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் "என்ன வருத்தம்?" என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுறுவலுடன் "இவ்வளவுதானா, நான் எழுதித் தருகிறேன், நான்கு கோடி பாடல்கள். கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்" என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கி நின்றனர். அவ்வையார் "ஒவ்வொரு பாடலும் ஒரு கோடி பொன் மதிப்புடையது, சென்று கொடுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். அவையில் இந்த கோடிப் பாடல்களை வாசித்தனர் புலவர்கள்.  

1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும். 

2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும். 

3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.

4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும். 

இவ்வாறு அவ்வையார் எழுதி அனுப்பிய நான்கு கோடி குறித்த கவிதை, எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும். மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப் புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும், ஆமாம், அவ்வையார் இயற்றியதுதான், எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினார் என்பது வரலாறு. அவ்வையாரின் புலமையை மட்டுமல்ல, ஒரு தாய்போல் இருந்து தமிழின் குழந்தைகைகளான கவிஞர்களை காப்பாற்றிய அவரின் தாய்மைப் பண்பையும் இந்நிகழ்ச்சி சித்திரிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.