2017-08-15 14:05:00

பாசமுள்ள பார்வையில்: பார்வைத்திறன் அற்றபோதும், பரமனைக் காண


மரியா, சிறுமியாக இருந்தபோது நிகழ்ந்த ஒரு விபத்தால், அவரது கண்பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலவகையான மருத்துவச் சிகிச்சைகள் பெற்றும், தன் 30வது வயதில், மரியா, தன் பார்வைத்திறனை முற்றிலும் இழந்தார்.

இந்நிலையிலும், இளம்பெண் மரியா, பிறருக்கு ஏதாவது ஒருவகையில் உதவவேண்டும் என்று விரும்பினார். அப்போது, அவர், 'தோன் ஓரியோனே திருநற்கருணை சகோதரிகள்' (Sacramentine Sisters of Don Orione) என்ற துறவு சபையைப்பற்றி கேள்விப்பட்டார்.

இத்துறவு சபையின் சகோதரிகள் அனைவரும் பார்வைத்திறன் அற்றவர்கள். இவர்கள், ஒவ்வொருநாளும், 24 மணி நேர திருநற்கருணை ஆராதனையில் ஈடுபட்டுள்ளனர். "உலகின் ஒளியான இறைவனை அறியாதவர்களுக்காக, பார்வைத்திறனற்ற என் நிலையை ஒப்புக்கொடுக்கிறேன்" என்பது, இத்துறவு சபையில் இணைவோரின் விருதுவாக்காக அமைந்துள்ளது.

இச்சபையில் இணைந்த இளம்பெண் மரியா லுஸ் ஓஹேய்தா (Maria Luz Ojeda), அவர்கள், "ஆன்மாக்கள் மீட்படைவதற்கு நான் ஆற்றக்கூடிய ஆராதனைப்பணியால், நிம்மதியும், மகிழ்வும் அடைந்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

திங்கள் - நோயுற்றோர், செவ்வாய் - இளையோர், புதன் - உலக அமைதி, வியாழன் - இறையழைத்தல், வெள்ளி - முதியோர், சனிக்கிழமை - குழந்தைகள், ஞாயிறு - குடும்பங்கள்... என்று, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்துக்காக இச்சகோதரிகள் ஆராதனையில் ஈடுபடுகின்றனர்.

"இந்த துறவு சபையை அன்னை மரியாவின் அரியணைக்கு முன் ஒரு மலராக அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர் தன் புனிதக் கரங்களால் இம்மலரை நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசுவிடம் அர்ப்பணிப்பாராக" என்ற கருத்துடன், புனித லுயிஜி ஓரியோனே (Luigi Orione) அவர்கள், 1927ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இத்துறவு சபையை நிறுவினார்.

இத்துறவு சபை, தற்போது, இத்தாலி, இஸ்பெயின், பிலிப்பின்ஸ், கென்யா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலே ஆகிய நாடுகளில் பணியாற்றிவருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி, இச்செவ்வாயன்று, 'தோன் ஓரியோனே திருநற்கருணை சகோதரிகள்' சபையினர், தங்கள் 90வது ஆண்டை நிறைவு செய்துள்ளனர்.

பார்வைத்திறன் அற்றபோதும், பரமனிடம் மற்றவர்களை அழைத்துவரும் பாசப்பணியில் ஈடுபட்டுள்ள அருள் சகோதரிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.