2017-08-12 16:04:00

சுரங்கத் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு எதிராக கானடா ஆயர்கள்


ஆக.12,2017. இலத்தீன் அமெரிக்காவிலுள்ள கானடா நாட்டின் சுரங்கத் தொழிற்சாலைகளால், நம் பூமியாகிய பொதுவான இல்லத்திற்கு ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, மற்றும், அவற்றால் பாதிக்கப்படும் ஏழைகளின் கண்ணீரைப் பார்த்து, மௌனம் சாதிக்க முடியாது என, கானடா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Douglas Crosby அவர்கள் கூறியுள்ளார்.

இலத்தீன் அமெரிக்காவில் சுரங்கத் தொழிற்சாலைகளை நடத்தும் கானடா நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, அப்பகுதி மக்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளவேளை, இவை குறித்து புலன்விசாரணை நடத்துமாறு, கானடா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், ஆயர் Crosby.

இவ்விவகாரம் குறித்து, கானடா நாட்டு பிரதமர் Justin Trudeau அவர்களுக்கு, கடிதம் எழுதியுள்ள, Hamilton ஆயர் Crosby அவர்கள், இலத்தீன் அமெரிக்காவில் அல்லது, உலகின் ஏனைய பகுதிகளில், சுரங்கத் தொழிற்சாலைகளை நடத்தும் கானடா நிறுவனங்கள், அறநெறிக்குப் புறம்பாகச் செயல்படுவதை, கானடா நாட்டினரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சுரங்கத் தொழிற்சாலைகளின், ஒழுக்கநெறிக்குப் புறம்பான, நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற முறைகளால், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நிலங்கள் அழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார், ஆயர் Crosby.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.