2017-08-11 15:07:00

பழங்குடியினர் உரிமைகளுக்காக இந்தியத் திருஅவை


ஆக.11,2017. இந்தியாவில் வாழ்கின்ற பழங்குடியினரின் வாழ்வை முன்னேற்றவும், அவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து உழைக்கவுமான தனது அர்ப்பணத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது, இந்தியத் திருஅவை.

ஆகஸ்ட் 9, இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பழங்குடியினர் நாளையொட்டி, இந்திய ஆயர் பேரவையும் (CBCI), இப்பேரவையின் பழங்குடியினர் அலுவலகமும் இணைந்து கருத்தரங்கு ஒன்றை நடத்தி வெளியிட்ட அறிக்கையில், பழங்குடியினரின் உரிமைகளுக்காக்க உழைப்பதற்கு, திருஅவையின் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆதிவாசிகள் (Adivasi) என அழைக்கப்படும் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து, ஐ.நா. நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய அறிக்கை குறித்தும், ஐ.நா.வின் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்திய மக்கள் தொகையில் 8.6 விழுக்காட்டினராகவுள்ள பழங்குடியினரில், ஏறத்தாழ 705 இனங்கள் உள்ளன. ஏறக்குறைய 75 விழுக்காட்டு பழங்குடியினர் குடும்பங்கள்,  வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றன. இக்குடும்பங்களில், 19.7 விழுக்காட்டினருக்கு மட்டுமே குடி நீர் வசதிகள் உள்ளன. 77.4 விழுக்காட்டினருக்கு நலவாழ்வு வசதிகள் கிடையாது. குழந்தை இறப்பு விகிதமும் 62.1 விழுக்காடாக உள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.