2017-08-09 17:02:00

'ஓர் இல்லம் தாருங்கள்' இசை நிகழ்ச்சியில் 1000 கலைஞர்கள்


ஆக.09,2017. புலம்பெயர்ந்தோருக்கு உறைவிடங்கள் உருவாக்கும் நோக்கத்துடன், 'ஓர் இல்லம் தாருங்கள்' என்ற பெயரில், உலகின் புகழ்பெற்ற 1000 கலைஞர்கள், செப்டம்பர் 20ம் தேதி உலகின் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் என்று, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு அறிவித்துள்ளது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும், Sofar Sounds என்ற நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்த முயற்சியின் வழியாக திரட்டப்படும் நிதியைக் கொண்டு, உலகெங்கும் பரவியுள்ள புலம் பெயர்ந்தோருக்கு உறைவிடங்கள் அமைத்துத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஓர் இல்லம் தாருங்கள்' என்ற பெயரில், புலம்பெயர்ந்தோர் உலக நாளான ஜூன் 20ம் தேதி துவக்கப்பட்ட இம்முயற்சியின் பயனாக, உலகின் 200 பெரு நகரங்களில் 300க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கும் இன்று 2 கோடியே 20 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தோராய் உள்ளனர் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உலகின் 10 நாடுகளை சார்ந்தவர்கள் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.