2017-08-04 14:43:00

அமைதிக்காகச் செபிக்க,ஒன்றிணைந்து உழைக்க திருத்தந்தை அழைப்பு


ஆக.04,2017. “இயேசுவின் பெயரில், நம் சான்று வாழ்வு வழியாக, அமைதி இயலக்கூடியதே என்பதை நம்மால் அறியச் செய்ய முடியும்!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

இரண்டாம் உலகப் போரின்போது (1939-45), 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம்  தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில், உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்டதன் நினைவுநாள் அண்மித்துவரும்வேளை, உலகில் அமைதி இயலக்கூடியதே என்பதற்கு, நாம் சாட்சிகளாய் வாழ வேண்டுமென்று, திருத்தந்தை, தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம்  தேதி காலை 8.16 மணிக்கு, ஹிரோஷிமா நகரத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு, B-29 என்ற அணுகுண்டை வீசியதில், உடனடியாக ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும், அந்நகரத்தின் 90 விழுக்காடு பகுதி அழிந்தது. பின்னர், கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதற்கு மூன்று நாள்கள் சென்று, ஆகஸ்ட் 9ம் தேதி, நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட B-29 என்ற அணுகுண்டால், ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், ஜப்பானின் கியோட்டோ நகரிலுள்ள Hiei மலையில் நடைபெற்றுவரும், முப்பதாவது பல்சமய செபக் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து மதத்தினரும், அமைதிக்காகச் செபிக்கவும், ஒன்றிணைந்து உழைக்கவும், அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Tendai புத்தமதப் பிரிவின் தலைவர் மதிப்பிற்குரிய Koei Morikawa அவர்கள் பெயருக்கு, திருத்தந்தை எழுதியிருந்த இச்செய்தியை, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும், ஹாங்காங்கின் முன்னாள் ஆயர், கர்தினால் ஜான் டாங் ஹான் அவர்கள் வாசித்தார்.    

இந்தப் பல்சமயச் செபக் கூட்டம், ஆகஸ்ட் 6, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.