2017-07-29 14:17:00

பாசமுள்ள பார்வையில் - மணலிலும்... கல்லிலும்...


நண்பர்கள் இருவர் பாலை நிலத்தைக் கடந்து சென்றனர். வழியில் அவர்களிடையே உருவான கருத்து வேறுபாட்டால், வயதில் மூத்தவர், இளையவரை அறைந்துவிட்டார். அறைவாங்கியவர், உடனே, அங்கிருந்த மணலில், "என் நண்பன் இன்று என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினார்.

சிறிது தூரம் நடந்தபின், இருவரும் ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, அறைவாங்கிய இளையவர், ஒரு சுழலில் சிக்கினார். உடனே, மூத்தவர் அவரை மீட்டு, கரை சேர்த்தார். உயிர் பிழைத்த நண்பன், தன்னிடமிருந்த உளியைக் கொண்டு, அருகிலிருந்த பாறையில், "என் நண்பன் இன்று என் உயிரைக் காப்பாற்றினான்" என்று செதுக்கி வைத்தார்.

அறைவாங்கியதை மணலிலும், உயிர் காத்ததை கல்லிலும் எழுதக் காரணம் என்ன என்று, மூத்தவர் இளையவரிடம் கேட்டபோது, "தீமைகளை மணலில் எழுதினால், மன்னிப்பு என்ற காற்று அவற்றை மெல்ல, மெல்ல அழித்துவிடும். நன்மைகளை, கல்லில் செதுக்கினால், அவை காலமெல்லாம் வாழும்" என்று பதில் சொன்னார்.

"இவ்வுலகம் அனைத்தும் உன்னைவிட்டு வெளியேறும்போது, உள்ளே நுழைபவன், உண்மை நண்பன்" என்று வால்டர் வின்ச்செல் (Walter Winchell) என்பவர் கூறியுள்ளார்.

ஜூலை 30, இஞ்ஞாயிறு, உலகின் பல நாடுகளில் 'நட்பு நாள்' (Friendship Day) சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.