2017-07-28 15:27:00

பாசமுள்ள பார்வையில்...: புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை


நகரத்தில் வேலைபார்த்த மாதவன், கிராமத்தில் பிறந்து வளர்ந்த புது மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்திருந்தார். சில நாட்களிலேயே அக்கம்பக்கத்து குடியிருப்புக்களைக் குறித்து குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார், மாதவனின் மனைவி வனஜா. அவர்கள் அப்படியில்லை என மாதவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் மனைவி கேட்கவில்லை. தன் அம்மாவிடம் இவ்விவரத்தைக் கூறினார் மாதவன். மருமகளுக்கு எப்படி பாடம் கற்பிப்பது என எண்ணிய மாமியார், திடீரென மருமகளுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்பது புரியாத மருமகள், தன் கணவரிடம் இதைக் குறித்துக் கூறினார். மாதவனும் மனைவியை நோக்கி, ‘சரி, அம்மாதான் உன்னிடம் பேசவில்லை, நீ பேசினாயா?’ எனக் கேட்டார். 'அம்மாவே என்னிடம் பேச விரும்பாதபோது, நான் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்?' எனக் கேட்டார் வனஜா. 'பக்கத்து வீட்டுக்காரர்களும், உன்னை ஒதுக்கி வைப்பதாகவும், உன்னிடம் பேசுவதும் இல்லை என்கிறாயே, அவர்களும் இதேப்போல், நீ பேச விரும்பாதபோது, ஏன் உன்னிடம் வலிய முன்வந்து பேசவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கலாம் இல்லையா? என் அம்மா உன்னிடம் பேச விரும்பவில்லை என உன்னிடம் சொன்னார்களா? அவர்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்திருக்கலாம், அதை நினைத்துக்கொண்டு இருந்ததில், உன்னிடம் வந்து பேச நேரமில்லாமல் போயிருக்கலாம்' என்றார். தன்னிடம்தான் எங்கோ தவறிருக்கிறதோ என எண்ணிய வனஜா, அடுத்த நாள் வெளியில் வரும்போது, பக்கத்து வீட்டு பெண்மணியைப் பார்த்து இலேசாக புன்முறுவல் பூத்தார். பதிலுக்கு புன்னகை பூத்த பக்கத்து வீட்டு மாமி, 'உன்னைப்பற்றி இப்போதுதான் உன் மாமியாரிடம் விசாரித்துக் கொண்டிருந்தேன். என் மருமகள் ரொம்ப அடக்கம், பேசுவதற்கும் பழகுவதற்கும் ரொம்ப வெட்கப்படுவான்னு சொல்லிக்கொண்டிருந்தாங்க. ஒன்னும் கவலைப்படாதே, இங்கு இருக்கிற பலருக்கு இந்த ஊர் புதுசுதான். ஒருத்தருக்கொருத்தர் நாமதான் ஒத்தாசையா இருக்கணும்' என்று கூறிக்கொண்டே ஒரு தாய்க்குரிய பாசத்துடன் வனஜாவை அணைத்துக் கொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.