2017-07-24 15:56:00

அமைதிக்கும் ஒப்புரவிற்கும் பங்களிப்பது செபம்


ஜூலை,24,2017. புனித பூமியாம் எருசலேமில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அப்பகுதியின் அமைதிக்காக மக்கள் செபிக்க வேண்டும் என தான் விண்ணப்பிப்பதாகவும், இஞ்ஞாயிறன்று தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகர், புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, மூவேளை செப உரை வழங்கியபின், புனித பூமியில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரிலும், ஒப்புரவிற்கும் அமைதிக்குமான எண்ணங்களை இறைவன் தூண்ட வேண்டும் என்ற நோக்குடன் ஒவ்வொருவரும் செபத்தில் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

எருசலேமில் மிதப்போக்கும், கலந்துரையாடல்களும் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தின் வழியாக நாம் அமைதிக்கும் ஒப்புரவிற்கும் பங்காற்றமுடியும் என்றார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.