2017-07-20 16:17:00

வலுவிழந்த நிலையைப் பயன்படுத்தி சுரண்டல்கள்


ஜூலை,20,2017. மக்கள் நாடுவிட்டு நாடு செல்லும் நிலை உலகெங்கும் பரவியுள்ள சூழலில், குடியேற்றதாரர்களின் சக்தியற்ற நிலையை புரிந்துகொள்ளும் கடமை அனைவரையும் சேரும் என்று ஜெனீவாவில் நடந்த கூட்டம் ஒன்றில், பேராயர் இவான் யூர்கோவிச் அவர்கள், இச்செவ்வாயன்று உரை வழங்கினார்.

"நாடுவிட்டு நாடு செல்வோரின் வலுவிழந்த நிலைகள்" என்ற தலைப்பில் ஜூலை 18, 19 ஆகிய இருநாள்கள், குடியேற்றம் குறித்த பன்னாட்டு உரையாடல் நடைபெற்ற வேளையில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக பேராயர் யூர்கோவிச் அவர்கள், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஒருவரது வலுவிழந்த நிலையை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவோர் இருப்பதாலேயே, குடியேற்றதாரர்களும், புலம் பெயர்ந்தோரும் பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர் என்று, பேராயர் யூர்கோவிச் அவர்கள், கவலையை வெளியிட்டார்.

வலுவிழந்தோருக்கு உறுதி வழங்குவதே நீதியான வழி என்பதை, திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதையும், பேராயர் யூர்கோவிச் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

குடிபெயர்ந்து வாழும் பலர், தங்கள் குடும்பங்களை விட்டு தனித்துள்ளனர் என்பதையும் தன் உரையில் சிறப்பாகச் சுட்டிக்காட்டியப் பேராயர் யூர்கோவிச் அவர்கள், பிரிந்திருக்கும் குடும்பங்களை இணைப்பது, உலக அரசுகளின் முக்கிய கடமையே தவிர, குடும்பங்களைப் பிரிப்பது அல்ல என்று தன் உரையில் வலியுறுத்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.