2017-07-19 16:50:00

பாத்திமா திருத்தலத்தில் இளையோர் யூபிலி


ஜூலை,19,2017. போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் அன்னை மரியா தோன்றியதன் நூறாம் ஆண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், செப்டம்பர் 9,10 ஆகிய இரு நாள்கள், அத்திருத்தலத்தில், இளையோர் யூபிலி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"அமைதியின் இரகசியம், இதயத்தின் வழி" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, போர்த்துக்கல் நாட்டின் அனைத்து பங்குத்தளங்களிலிருந்தும், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், இளையோர் வருவர் என்று, திருத்தலம் அறிவித்துள்ளது.

அமைதிக்காக தயாரிப்பு, அமைதியின் இதயம், இதயத்தின் அமைதி மற்றும், அமைதியை வாழ்தல் என்ற நான்கு மையக் கருத்துக்கள், இவ்விரு நாள்களில் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாத்திமா அன்னையின் காட்சியைக் கண்ட மூவரில் ஒருவரான அருள் சகோதரி லூசியா அவர்கள் எழுதிய எண்ணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடல்கள், இந்த இளையோர் நாள் நிகழ்வுகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன.

இந்த இரு நாள் நிகழ்வுகளும் போர்த்துக்கல் நாடெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், பாத்திமா திருத்தலம் அறிவித்துள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.