2017-07-14 16:15:00

திருஅவையில் பெண்களுக்கு மேலும் பொறுப்புகள் வழங்கப்பட..


ஜூலை,14,2017. திருஅவையில் பெண்களுக்கு மேலும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமென்ற ஆவலை வெளியிட்டுள்ளார், ஸ்காண்டிநேவிய நாடுகளின் முதல் கர்தினால் Anders Arborelius.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஒன்றான சுவீடன் நாட்டின் Stockholm  ஆயரான கர்தினால் Arborelius அவர்கள், National Catholic Register (NCR) என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ளார்.

சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் பெண்களின் பங்கு மிக முக்கியம் எனவும், திருஅவையில், இவ்விவகாரத்தில், சில சமயங்களில் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது எனவும், அப்பேட்டியில் தெரிவித்துள்ளார், கர்தினால் Arborelius.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களைக் கவர்ந்திருந்த, கொல்கத்தா புனித அன்னை தெரேசா, ஃபோக்கோலாரே இயக்கத்தை ஆரம்பித்த Chiara Lubich போன்றோரின் எடுத்துக்காட்டான வாழ்வையும் குறிப்பிட்டார், கர்தினால் Arborelius.

திருஅவையில், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதற்கு, கர்தினால்கள் அவை இருப்பது போன்று, பெண்கள் அவையையும் கொண்டிருக்கலாம் என்றும், சுவீடன் கர்தினால் கருத்து தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஜூன் மாதம் உருவாக்கிய ஐந்து புதிய கர்தினால்களுள், கர்தினால் Arborelius அவர்களும் ஒருவர். இவர் சுவீடன் நாட்டின் முதல் கர்தினாலாவார்.  

வட ஐரோப்பாவிலுள்ள டென்மார்க், நார்வே சுவீடன் ஆகிய மூன்றும், ஸ்காண்டிநேவிய நாடுகளாகும். பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும், பாரோ தீவுகள், சில சமயங்களில் ஸ்கேன்டினவியாவின் பகுதிகளாக கருதப்படுகின்றன

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.