2017-07-12 15:40:00

திருத்தந்தை: மறைக்கல்விப்பணி ஒருவர் பெறும் வேலை அல்ல


ஜூலை,12,2017. மறைக்கல்விப்பணி என்பது, ஒருவர், தன் வாழ்வில் பெறும் வேலை அல்ல, மாறாக, அது அவரது வாழ்வாகவே மாறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டில் நடைபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

ஜூலை 11, இச்செவ்வாய் முதல், 14 இவ்வெள்ளி முடிய, அர்ஜென்டீனாவின் புவெனஸ் அயிரஸ் நகரில், மறைக்கல்விப்பணியை மையப்படுத்தி நடைபெறும்  பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

நோயுற்றோரை சந்தித்தல், பசித்தோருக்கு உணவளித்தல், குழந்தைகளுக்கு கல்விபுகட்டுதல் என்ற அனைத்து பணிகளையும், அசிசி நகர் புனித பிரான்சிஸ், தான் வழங்கும் மறையுரையாகவும், மறைக்கல்விப் பணியாகவும் உணர்ந்தார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைக்கல்விப்பணியாளர் ஒவ்வொருவரும், கிறிஸ்துவிலிருந்து புறப்பட்டு, கிறிஸ்துவோடு இணைந்து செல்லும் பயணி என்பதை உணரவேண்டும் என்றும், தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை சொல்லித்தரும் பணி இதுவல்ல என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

'கிறிஸ்துவின் வழியே அடைந்த மீட்பை அறிவித்தல்' என்று பொருள்படும் 'Kerygma' என்ற கொடையைப் பெற்றுள்ள மறைக்கல்விப் பணியாளர்கள், இப்பணியை ஆற்றுவதற்கு, தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று, இச்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

புவெனஸ் அயிரஸ் நகரில் உள்ள பாப்பிறை கத்தோலிக்க பல்கலைக்கழகமும், அர்ஜென்டீனா ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணி மற்றும் மறைக்கல்விப்பணி குழுவும் இணைந்து நடத்தும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, "நம்பிக்கை கொள்வோர்  பேறு பெற்றோர்" என்பது மையக்கருத்தாக அமைந்துள்ளது.

விசுவாசக் கோட்பாடு பேராயத்தின் புதியத் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அண்மையில் நியமிக்கப்பட்ட பேராயர் லூயிஸ் பிரான்சிஸ்க்கோ இலதாரியா அவர்கள், இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.