2017-07-08 13:42:00

பாசமுள்ள பார்வையில்: சுதந்திர தேவதையின் வரவேற்பு


தங்கள் நாடுகளில் அடக்குமுறை பிரச்சனைகளைச் சந்தித்த பல்லாயிரம் மக்கள், 18 மற்றும், 19ம் நூற்றாண்டுகளில், சுதந்திரத்தைத் தேடிச்சென்ற ஒரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கியது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் கனவுடன், இம்மக்கள், அமெரிக்கக் கடற்கரையை நெருங்கியபோது, அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திரத் தேவதையின் சிலை, அவர்களை வரவேற்றது. அச்சிலை வைக்கப்பட்டுள்ள மேடையில், கவிதையொன்று பொறிக்கப்பட்டுள்ளது. எம்மா இலாசரஸ் (Emma Lazarus) என்ற கவிஞர் இயற்றியுள்ள அக்கவிதையின் ஒரு சில வரிகள், சுதந்திர தேவதை, மனித சமுதாயத்திடம் நேரடியாகப் பேசுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. கனிவு ததும்பும் அவ்வரிகள் இதோ:

"உங்கள் நடுவே களைப்புற்று, வறுமையுற்று,

சுதந்திரத்தைச் சுவாசிக்க ஏங்கும் மக்களை எனக்குக் கொடுங்கள்.

உங்கள் கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகள் போன்ற

மக்களை எனக்குக் கொடுங்கள்.

வீடற்று, புயல்சூழ்ந்த கடலில் தத்தளிக்கும்

மக்களை என்னிடம் அனுப்புங்கள்..."

சுதந்திர தேவதையின் மேடையில் பொறிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைகள், மத்தேயு நற்செய்தியில் நாம் கேட்கும் இயேசுவின் அழைப்பை எதிரொலிப்பதாக அமைந்துள்ளன:

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11: 28)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.