ஜூலை,08,2017. வறுமை, பசி மற்றும், போரினால் நாடுகளைவிட்டு வெளியேறி, தரமான வாழ்வுதேடி புலம்பெயரும் மக்கள், நம் சகோதர, சகோதரிகள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு வருகின்ற புலம்பெயர்ந்த மக்களை ஏற்கும், இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கு, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இவ்வாறு தனது டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றபின் மேற்கொண்ட இந்த முதல் மேய்ப்புப்பணி பயணத்தில், லாம்பெதூசா தீவு சென்று, அங்குப் புலம்பெயர்ந்து வாழும் மக்களைச் சந்தித்தார். மேலும், மத்திய தரைக் கடலில் இறந்த புலம்பெயர்ந்து மக்களின் நினைவாக, கடலில் மலர்வளையம் ஒன்றையும் வைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு ஜூலை 8ம் தேதியன்று லாம்பெதூசா தீவுக்குத் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டார். இதை நினைவுகூர்ந்த அத்தீவின் மேயர் ஜூசி நிக்கோலினி அவர்கள், திருத்தந்தை இங்கு வந்து சென்றதிலிருந்து, தங்களோடு அவர் மிக நெருக்கமாக இருப்பதாக உணர்கின்றோம் எனத் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |