2017-07-07 16:04:00

அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு ஆயர்கள்


ஜூலை,07,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலாஸ்கா வரை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வட கொரியா பரிசோதனை செய்துள்ளவேளை, உலகில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு, அமெரிக்க மற்றும், ஐரோப்பிய ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

‘அணு ஆயுதங்களைக் களைதல் : மனிதப் பாதுகாப்பைத் தேடுதல்’ என்ற தலைப்பில் அமெரிக்க மற்றும், ஐரோப்பிய ஆயர்கள் ஒன்றிணைந்து இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத ஒழிப்பு குறித்து, இவ்வாரத்தில் ஐ.நா.வில் கூட்டம் நடைபெற்றதையொட்டி, அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், உலகில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவதற்கு, அமெரிக்க மற்றும், ஐரோப்பிய அரசுகள், ஏனைய நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த ஐ.நா. அவைக் கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாடும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும், கலந்துகொள்ளாதது பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், பாதுகாப்பு என்ற பெயரில், அணு ஆயுதக் கிடங்கைக் கொண்டிருக்கும் எந்தவொரு நாடும், தனது நிலைமையை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.