2017-06-24 11:41:00

பாசமுள்ள பார்வையில் – கொலையாளியும் விருந்தினரே...


2015ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், லிபியா கடற்கரையில், ISIS தீவிரவாதிகளால், கழுத்து அறுபட்டு கொலையுண்ட 21 இளையோரில் தன் இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது கடைசி மகன் பெஷீரும் ஊடகங்கள் வழியே பகிர்ந்துகொண்ட எண்ணங்கள், நம்பிக்கைச் செய்திகளாக நம்மை அடைந்துள்ளன.

பெஷீரின் இரு அண்ணன்களான, பிஷாய், சாமுவேல் இருவரும் கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர் என்று கூறிய பெஷீர், "என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லியபடியே இறந்தது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. ISIS குழுவினர் நினைத்திருந்தால், அந்த ஒலியை மௌனமாக்கிவிட்டு, வெறும் ‘வீடியோ’வை மட்டும் அனுப்பியிருக்கலாம். ஆனால், ஒலிப்பதிவை மாற்றாமல், அதை அப்படியே அனுப்பியதற்காக அவர்களுக்கு நன்றி" என்று தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இளையவர் பெஷீர் அந்த நேர்காணலில் தன் தாயைக் குறித்து சொன்னது, நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. தன் இரு மகன்களையும் பறிகொடுத்த தாயிடம், "அம்மா, ISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?" என்று பெஷீர் கேட்டபோது, அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிப்பேன்" என்று கூறியதாக, பெஷீர் தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.