2017-06-19 15:30:00

திருநற்கருணையில் கடவுளின் அன்பை நினைவுகூர்கின்றோம்


ஜூன்,19,2017. உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு இரவு ஏழு மணிக்கு, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணையில் நாம் கடவுளின் அன்பை நினைவுகூர்கின்றோம் என, மறையுரை வழங்கினார்.

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவை நாம் கொண்டாடும்போது, கிறிஸ்து நமக்குச் செய்த எல்லாவற்றையும், குறிப்பாக, அவர் நம்மீது வைத்திருக்கும் மாபெரும் அன்பை நினைவுபடுத்த, திருநற்கருணை நமக்கு உதவுகின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவர், திருநற்கருணையில், அன்புக்காக நொறுக்கப்பட்டவராக, சிதறிய நம் வாழ்வின் மத்தியில், நம்மைச் சந்திக்க வருகிறார் என்பதை இப்பெருவிழா நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இப்பெருவிழா நாளின் இறைவார்த்தை, நினைவுகூருங்கள் என்பதை, நம் ஒவ்வொருவரிடமும் கூறுகின்றது என்றார்.

 

செடிக்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று, விசுவாசத்திற்கு நினைவுகூருவது, இன்றியமையாதது எனவும், தண்ணீரில்லாத செடி, உயிரோடு இருந்து கனிதர முடியாது, அதேபோல்தான் விசுவாசமும் என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவர் நமக்கு ஆற்றியுள்ள அனைத்தையும் நினைவுகூர்வதற்கு ஆழமான விசுவாசம் தேவை என்றும் கூறினார்.

ஓய்வின்றி ஆற்றப்படும் செயல்கள் மற்றும், தொழிலால், நம் நினைவுகள் பலவீனமடைகின்றன எனவும், இத்தகைய வாழ்விலும், நிகழ்வுகளிலும், நினைவுகளைக் கொண்டிருப்பது கடினம் எனவும், இந்த நிலை, மேலெழுந்தவாரியாக வாழ்வதற்கு நம்மை இட்டுச் செல்லும் எனவும் எச்சரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

திருநற்கருணையை இதயங்களில் நாம் வாங்குகையில், கிறிஸ்து நம்மை அன்புகூர்கிறார் என்ற உறுதியில், பெரு மகிழ்வடைவதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது எனவும், திருநற்கருணை, கடவுளின் அன்பை நமக்கு நினைவுபடுத்துகின்றது எனவும், மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.