2017-06-19 15:08:00

Bozzolo, Barbiana இத்தாலிய நகரங்களுக்கு திருத்தந்தை


ஜூன்,19,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 20, இச்செவ்வாயன்று, வட இத்தாலியின் Bozzolo, Barbiana ஆகிய இரு நகரங்களுக்குச் சென்று, அருள்பணியாளர்கள் Primo Mazzolari (1890-1959), Lorenzo Milani (1923-1967) ஆகிய இருவரின் கல்லறைகளில் செபிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணம், அதிகாரப்பூர்வ பயணம் போன்று இல்லாமல், தனிப்பட்ட பயணமாக அமைந்திருக்கும் எனவும், ஜூன் 20ம் தேதி செவ்வாய் காலை 7.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, இவ்விரு நகரங்களுக்கும் சென்று, அன்று பகல் 1.15 மணிக்கு வத்திக்கான் திரும்புவார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

Bozzolo, கிரேமோனா மறைமாவட்டத்திலும், Barbiana, பிளாரன்ஸ் உயர்மறைமாவட்டத்திலும் உள்ளன. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்விரு அருள்பணியாளர்களும், நிர்வாகத்திற்கு எதிராக இருந்தார்கள் எனக் குறைகூறப்பட்டாலும், இவர்கள் இருவரும் தங்களின் வாழ்நாள் முழுவதும், திருஅவைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

அருள்பணி Lorenzo Milani அவர்கள் இறந்ததன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி அவரின் கல்லறையைப் பார்வையிட்டு செபிக்கவுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அத் லிமினா சந்திப்பையொட்டி, ஹெய்ட்டி நாட்டு ஆயர்கள், இத்திங்களன்று, திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும், உரோம் மறைமாவட்ட ஆயரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இத்திங்கள் இரவு ஏழு மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில்,  உரோம் மறைமாவட்ட மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார்.

இம்மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்கு முன், உரோம் மறைமாவட்ட காரித்தாஸ் நிறுவனம் அடைக்கலம் அளித்துள்ள, புலம்பெயர்ந்த குடும்பத்தினரையும் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.