2017-06-16 16:46:00

பாசமுள்ள பார்வையில்: பிறருடன், பிறருக்காக, பிரசன்னமாகி...


நான்கு வயது நிறைந்த சிறுவன் பிரின்ஸ் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில், ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் மனைவியை அண்மையில் இழந்தவர். ஒரு நாள் மாலை, அவர் தன் வீட்டுக்கு முன்புறத்தில், ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அதைப் பார்த்த சிறுவன் பிரின்ஸ், அந்த முதியவர் அருகே சென்று, அவர் மடியில் ஏறி அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்டநேரம் சென்று, பிரின்ஸ் மீண்டும் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவன் செய்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா, அவனிடம், "நீ தாத்தா மடியில உக்காந்திருந்தியே, அவர்கிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டார். பிரின்ஸ் அம்மாவிடம், "ஒன்னும் சொல்லல. அவர் நல்லா அழட்டும்னு அவர் மடியில உக்கார்ந்திருந்தேன்" என்று சொன்னான்.

எவ்விதத் தயக்கமும் இல்லாமல், அந்த முதியவரின் மடியில் உரிமையோடு ஏறி அமர்ந்து, அவர் உள்ளத்தின் பாரத்தை இறக்குவதற்கு உதவிய, சிறுவன் பிரின்ஸ், இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவின் உட்பொருளை நமக்குச் சொல்லித் தருகிறான்.

அன்பை, பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக, முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே, உன்னத அன்பு. இந்த முழுமையான பிரசன்னம், வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.