ஜூன்,16,2017. “நம் நிலம், நம் இல்லம், நம் எதிர்காலம்” என்ற தலைப்பில், நிலங்கள் பாலைநிலமாவது மற்றும், வறட்சியடைவதற்கு எதிராகச் செயல்படுவதை ஊக்குவிக்கும் உலக நாள், ஜூன் 17, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
1994ம் ஆண்டில், ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 17ம் நாள், இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
நிலங்களின் சக்தியை மக்களுக்கு உணர்த்தி, அவர்கள் தங்கள் நாடுகளிலே வாழ்வதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், நிலங்கள் பாலைநிலமாவதைத் தடுப்பது குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தை நாடுகள் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி, வேறு நாடுகளில் குடிபெயர்வோரின் எண்ணிக்கை, கடந்த பதினைந்து ஆண்டுகளில், உலக அளவில் வேகமாக அதிகரித்துள்ளது என்றும், இம்மக்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில், 24 கோடியே 40 இலட்சமாக இருந்தது என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் சீர்கேடு, நிலையற்ற அரசியல், உணவு பாதுகாப்பின்மை, ஏழ்மை ஆகியவையே, மக்களின் புலம்பெயர்வுக்குக் காரணம் எனவும், நிலங்களை நாம் பயன்படுத்தும் முறையில், அடுத்த முப்பது ஆண்டுகளில் மாற்றங்கள் இடம்பெறவில்லையெனில், ஏழைகள் மற்றும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை மேலும் உயரும் எனவும், ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |