2017-06-15 16:29:00

இந்தியாவில் அவமதிப்புக்குள்ளாகும் முதியோர் – ஓர் ஆய்வறிக்கை


ஜூன்,15,2017. பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில், முதியோர் வன்கொடுமைக்குள்ளாவதாக இந்திய ஹெல்ப்ஏஜ் ஆய்வு தெரிவித்துள்ளது.

பொதுநல அறக்கட்டளை அமைப்பான ஹெல்ப்ஏஜ், இந்தியாவில் மேற்கொண்ட நாடு தழுவிய ஆய்வின் அடிப்படையில் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள் இவ்வியாழன் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, தி ஹெல்ப்ஏஜ் இந்தியா, 'மூத்தகுடிகளை இந்தியா எப்படி நடத்துகிறது' என்ற ஆய்வறிக்கையை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.  

இந்த கணக்கெடுப்பு, இந்திய அளவில், முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம், என்ற வரிசையில் அமையப்பெற்ற 19 நகரங்களில் நடைபெற்றது.

வடிவமைக்கப்பட்ட கேள்வித்தாள், மற்றும், நேர்காணல் வழியாக 4,615 பிரதிநிதிகளிடம் பெற்ற பதில்கள், தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பின்படி, சென்னையில் 49 விழுக்காடு மூத்தகுடிமக்கள் அவர்களின் வயது காரணமாக மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

பெங்களூரில் இந்த விழுக்காடு 70 என்றும், இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 60 விழுக்காடு என்றும், மும்பையில் நடத்தப்பட்ட நேர்காணலில் சென்னைக்கும் குறைவாக 33 விழுக்காடாக இருப்பதையும் அறியமுடிந்தது.

ஜூன் 15, இவ்வியாழன், முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.