2017-06-15 15:49:00

C 9 கர்தினால்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட 20வது கூட்டம்


ஜூன்,15,2017. வத்திக்கானில் இயங்கிவரும் திருப்பீடத் துறைகள் தலத்திருஅவையுடன் இன்னும் சிறப்பாக இணைந்து பணியாற்றும் வழிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு ஆலோசனைகள் வழங்க நியமித்துள்ள கர்தினால்கள் குழுவுடன் கலந்து பேசினார்.

ஜூன் 12 முதல் 14 முடிய வத்திக்கானில் நடைபெற்ற C 9 கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 20வது சந்திப்பு குறித்து, வத்திக்கான் செய்தித்தொடர்புத் துறையின் தலைவர், கிரெக் பர்க் (Greg Burke) அவர்கள் செய்தியாளர்களிடம் இப்புதன் பிற்பகல் பேசினார்.

பாஸ்டன் கர்தினால் Sean O’Malley அவர்களைத் தவிர ஏனைய கர்தினால்கள் அனைவரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தின் ஒவ்வோர் அமர்விலும் திருத்தந்தையும் கலந்துகொண்டார் என்றும், புதன் காலை நடைபெற்ற மறைக்கல்வி உரை காரணமாக, ஜூன் 14 காலை நடைபெற்ற கூட்டத்தில் மட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் பர்க் அவர்கள் தெரிவித்தார்.

திருப்பீடத்தில் இயங்கிவரும் பல்வேறு துறைகளில் துவக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், குறிப்பாக, பல் சமய உரையாடல் அவை, கீழை வழிபாட்டு பேராயம், மற்றும் பொருளாதாரத் துறை ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் ஆழமான ஆலோசனைகள் நிகழ்ந்தன என்று அறிவிக்கப்பட்டது.

C 9 கர்தினால்களின் அடுத்த ஆலோசனைக் கூட்டம், செப்டம்பர் 11 முதல், 14ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.