2017-06-10 15:50:00

இயேசுவை அவமதிக்கும் குஜராத் பாடப் புத்தகம்


ஜூன்,10,2017. குஜராத் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள மேல்நிலைப்பள்ளிக்கான பாடப் புத்தகம் ஒன்றில் இயேசு, சாத்தான் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து, இந்திய கிறிஸ்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

'இந்திய கலாச்சாரத்தில் ஒரு குருவுக்கும் அவரின் சீடர்களுக்கும் இடையே நிலவும் உறவு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி பாடப்புத்தகத்தின் 16ம் பிரிவில், 'சாத்தானாகிய இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது' என்ற கூற்று இடம்பெற்றுள்ளது.

இத்தவறை சுட்டிக்காட்டிய வழக்குரைஞர் சுப்பிரமணியம் அய்யர் அவர்கள், சமூகக் குழுக்களிடையே தவறான மத உணர்வுகளைத் தூண்டி, சட்டம், ஒழுங்கு, சீர்குலைய காரணமாகும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 295 ஐ பயன்படுத்தலாம் என்றதுடன், இந்தப் புத்தகங்கள் அரசால் திரும்பப் பெறவேண்டும் என விண்ணப்பித்தார்.

அரசின் இத்தவறு குறித்து கருத்துக்களை வெளியிட்ட மனித உரிமை நடவடிக்கையாளர், இயேசு சபை அருள்பணியாளர் செட்ரிக் பிரகாஷ் அவர்கள், இந்தியக் குழந்தைகளின்  வருங்காலத்தையும், குண நலன்களையும், வடிவமைப்பதில், முக்கியப் பங்காற்றவேண்டிய கல்வித்துறையினர், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கவலை தருவதாக உள்ளது என்றார்.

சிறும்பான்மையினர், தலித் சமூகத்தினர், பழங்குடியினர் என, மக்களை தரம் பிரித்து ஒழிப்பதில், பலர், எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை எனவும் கூறினார், அருள்பணி பிரகாஷ்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.