2017-06-07 16:06:00

"ஒவ்வொருநாள் புனிதர்கள் திருஅவைக்குத் தேவை" - திருத்தந்தை


ஜூன்,07,2017. "கலப்படமற்ற, சீரான தினசரி வாழ்வை மேற்கொள்ளும் ஒவ்வொருநாள் புனிதர்கள் திருஅவைக்குத் தேவை" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிட்டார்.

மேலும், பல்வேறு நாடுகளின் ஆயர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, புனித பேதுருவின் கல்லறைக்கு மேற்கொள்ளும் திருப்பயணமாகக் கருதப்படும் 'அத் லிமினா' பயணத்தை ஜூன் 8, இவ்வியாழனன்று மேற்கொள்ளும் பானமா நாட்டு ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு, பானமா நாட்டில் 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வெனேசுவேலா நாட்டில் தொடர்ந்துவரும் பதட்ட நிலைகளைக் குறித்து திருத்தந்தையுடன் கலந்து பேச, அந்நாட்டு ஆயர் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் அனுப்பியிருந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வதிகாரிகளை இவ்வியாழன் திருப்பீடத்தில் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.