2017-06-06 16:37:00

ஏமன் நாட்டில் 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பலி


ஜூன்,06,2017. ஏமன் நாட்டில் போராலும் காலரா நோய் பரவலாலும், மக்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், உண்மை நிலைகளை அறிவது மிகவும் கடினமாக உள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளார், தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Hinder.

கடந்த 30 மாதங்களாக இரத்தம் சிந்தும் போர் இடம்பெற்றுவரும் ஏமனைக் குறித்து சமூகத்தொடர்பு நிறுவனங்களும் மறந்துவிட்டன என்ற கவலையை வெளியிட்ட ஆயர் ஹின்டர் அவர்கள், மருத்துவ உதவிகள் சரியான முறையில் சென்று சேர முடியாத நிலையில், குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துவரும் சூழலில், இந்நாடு மறக்கப்படுவது, பேராபத்திற்கே வழிவகுக்கும் எனவும் கூறினார்.

சில வலிமை மிகுந்த நாடுகள், தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே, உள் நாட்டு குழுக்களைக் கொண்டு போரை நடத்தி வருவது, அப்பாவி மக்களின் தொடர்ந்த உயிரிழப்புக்களுக்கு காராணமாகி வருவதாகவும் கவலையை வெளியிட்ட ஆயர் ஹின்டர் அவர்கள், வேகமாக பரவி வரும் காலரா நோயாலும் பெருமளவில் மக்கள், குறிப்பாக குழந்தைகள், உயிரிழந்து வருவது கவலை தருவதாக உள்ளது என்றார்

WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏமன் நாட்டில் அண்மைக் காலத்தில் 600க்கும் மேற்பட்டோர் காலரா நோய்க்கு பலியாகியுள்ளனர், அதில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள். இந்நாட்டில் ஒவ்வோர் ஐந்து நிமிடத்திற்கும் 5 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை உயிரிழக்கின்றது.  தற்போது அந்நாட்டில் ஏறத்தாழ 74,000 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.