2017-06-05 15:43:00

பாசமுள்ள பார்வையில்.. அன்னை எப்போதும் அழகானவர்


அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வந்ததும், அன்று அவர், முதியோர் இல்லத்தில் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு புறப்பட்டார். அப்போது பிள்ளைகள், அப்பா, பாட்டியை எப்போது அழைத்து வருவீர்கள் எனக் கேட்டனர். வீடு திரும்பிய அவருக்கு, அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் அவர் அலுவலகம் சென்றபோது, தெருவோரத்தில் ஒரு தாய், தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவருக்கு தன் அன்னையின் ஞாபகம்.

குழந்தைப் பருவத்தில் அம்மாவை நான் படுத்திய பாடு. அதனால் அம்மா, எத்தனை தோழிகளை இழந்தார். நான் செய்த குறும்புக்காக எத்தனை பேரை அவர் சமாளித்தார். என் பிள்ளை, என் பிள்ளை! என்று, என்னை மடியில் தூக்கித் திரிந்தவர், இன்று முதியோர் இல்லத்தில், யாருமற்ற அனாதையாய் ஆனாரே! இவை அனைத்திற்கும் காரணம் என் முன்கோபம் மட்டும்தான். ஒரு மாதத்திற்குமுன், ஒருநாள் அலுவலகப் பணிச் சுமை காரணமாய், விரக்தியுடன் வீடு வந்தேன். என் அம்மாவும், மனைவியும் ஏதோ கருத்து வேறுபாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அது சாதாரணச் சண்டைதான். ஆனால் என் பணிச் சுமையால், அவர்கள் இருவரையும் திட்டிவிட்டு, என் அறைக்குப் போனேன். என் அம்மா, என் அருகில் வந்து என்னப்பா என்றார்! என் மனைவி அம்மாவின் அருகில்..... என் பணிச் சுமை, மன இறுக்கம், இவற்றால் என் நிதானத்தை இழந்து, ஒன்றும் இல்லை, நீங்கள் இருவரும்தான் பிரச்சனை என்றேன். என் மனைவி அவள் கோபத்தைக் காட்டிச் சென்றாள் சமையல் அறைக்கு!. என் அம்மா மட்டும் என் அருகில் இருந்து, என்னை வேண்டும் என்றால் முதியோர் இல்லத்தில் விட்டுவிடு என்றார், நான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக!... என் மனமும் அதற்கு இசைந்தது. என் பிள்ளைகளும், மனைவியும் வேண்டாம் எனத் தடுத்தும், நான் என் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்தேன். அதற்குப்பின், என் அம்மா வீட்டில் இருந்தபோது இருந்த அந்த மகிழ்ச்சி, இப்போது இல்லாதது போல் உணர்ந்தேன். அம்மாவை அழைத்து வர முடிவெடுத்தேன். மறுநாள் அலுவலகம் செல்லாமல் நேரே முதியோர் இல்லத்திற்குச் சென்று, என் அம்மாவை அழைத்து வந்தேன். என் வீடு இப்போது அழகாய்த் தெரிவதாய் என் மனம் சொல்கிறது.

ஆம். அன்னை இருக்கும் இல்லம் ஆனந்தம் நடமாடும் ஆலயம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.