2017-06-03 15:35:00

வத்திக்கான் வளாகத்தில் தூய ஆவியார் பெருவிழா திருப்பலி


ஜூன்,03,2017. தூய ஆவியார் வருகைப் பெருவிழாவாகிய ஜூன் 4, இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக, உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தினர், உரோம் Circo Massimo திடலில், இச்சனிக்கிழமை மாலை திருவிழிப்பு வழிபாட்டை நடத்துகின்றனர். மாலை நான்கு மணிக்குத் தொடங்கும் இவ்வழிபாட்டில், மாலை ஆறு மணிக்கு திருத்தந்தை கலந்துகொள்கிறார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்ற இரண்டு ஆண்டுகளுக்குப்பின், 1967ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாணவர் குழு ஒன்று ஆன்மீகத் தியானத்தில் ஈடுபட்டது. அத்தியானத்தில் அம்மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் பயனாக ஆரம்பிக்கப்பட்டதே அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம். இன்று இது, உலகளாவிய இயக்கமாக மாறி, 12 கோடிக்கு மேற்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.

மே 31, இப்புதனன்று உரோம் நகரில் தொடங்கிய உலகளாவிய கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தின் பொன் விழா மாநாட்டில், ஏறக்குறைய 130 நாடுகளைச் சேர்ந்த முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். ஜூன் 4, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் வருகைப் பெருவிழாவுடன் இம்மாநாடு நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.