2017-06-01 16:08:00

குடும்பம், மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு


ஜூன்,01,2017. குடும்பம் என்பது, மனிதர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை, ஐரோப்பிய சமுதாயம் உணர்வதற்கு வழிகளைத் தேடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஐரோப்பிய கத்தோலிக்கக் குடும்பக் கழகங்கள் ஒருங்கிணைப்பின் (FAFCE) பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வமைப்பு, இருபது ஆண்டுகளைக் கடந்து வந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வதாகக் கூறினார்.

இவ்வுலகை, மனிதாபிமானம் மிக்கதாக, உடன்பிறந்த உணர்வு கொண்டதாக மாற்றுவதற்கு, குடும்பங்களே தலைசிறந்த புளிக்காரமாக செயலாற்றவேண்டும் என்று, திருத்தந்தை, இக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.

அரசியல், பொருளாதாரம், மத நம்பிக்கை ஆகிய உலகங்கள், உறுதியாக, நன்னெறி வழிகளில் செயலாற்ற, குடும்பங்களில் நிலவும் சூழல்கள் உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

குடும்பம் என்ற அடிப்படை கட்டுமானம் சிதைந்து வருவது, ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் பெரும் சவால் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை அன்பின் அடிப்படையில் கட்டியெழுப்பாமல், வெளி உலகின் கட்டுமானங்களை உறுதிப்படுத்த முடியாது என்பதைத் தெளிவாக்கினார்.

குடிபெயர்தல், வேலைவாய்ப்பு, மற்றும் கல்வி ஆகியவை ஐரோப்பிய சமுதாயம் அவசரமாக தீர்க்க வேண்டிய நெருக்கடிகள் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.