2017-05-30 15:26:00

வட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா


மே,30,2017. வட கொரியாவில் துன்புறும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களை தயாரிக்கும்படி, தென்கொரியாவின் சமூக மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவர்.

திருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Hyginus Kim Hee-joong அவர்களை அரசு மாளிகையில் சந்தித்து உரையாடிய புதிய அரசுத் தலைவர்  Moon Jae-in அவர்கள், வட கொரிய மக்களுக்கு உதவ வேண்டிய தென் கொரியாவின் கடமை குறித்தும், இரு நாடுகளுக்குமிடையே அமைதியை உருவாக்கவேண்டிய தேவை குறித்தும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரிய அரசுத் தலைவர் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தான் எப்போதும் தயாராக இருப்பதாக, ஏற்கனவே தென்கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவர், அதன் முதல்படியாக, வட கொரியாவிற்கு சமூக மற்றும் மத அமைப்புக்கள் வழியாக பொருளாதார உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

வடகொரியாவிற்கு எதிராக, அனைத்துலக சமுதாயம் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை மீறாமல், இந்த உதவிகள் ஆற்றப்படும் எனவும், தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் :  AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.