மே,29,2017. சமூகத் தொடர்புத்துறை, நேர்மறை எண்ணங்களை அதிகம் அதிகமாக பரப்பவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், பாகிஸ்தான் நாட்டின் வானொலி நிலைய இயக்குனர் ஒருவர்.
இன்றைய உலகில் கொலைகளும் பயங்கரவாதங்களும் குறித்த செய்திகளே, தகவல் துறையில் முதலிடத்தை வகிக்கின்றன, வளர்ச்சி மற்றும் நற்செயல்கள் குறித்தவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்று கூறிய, பாகிஸ்தான் வானொலி நிலைய இயக்குனர் Syed Khalid Waqar அவர்கள், அனைத்து நிகழ்வுகளும் வியாபார கண்ணோட்டதில் நோக்கப்பட்டு, குண்டுவீச்சு தாக்குதல்கள்கூட, இலாபம் தரும் செய்திகளாக மாறும்போது, சமூக மதிப்பீடுகள் அழிக்கப்பட்டு, எதிர்மறை எண்ணங்கள் மக்களின் மனங்களில் உருவாக காரணமாகிறது என்றார்.
பாகிஸ்தான் கத்தோலிக்கர்களால் இலாகூரில் ஏற்பாடுச் செய்யப்பட்ட சமுகத் தொடர்பு நாள் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய இஸ்லாமியரான Khalid Waqar அவர்கள், திருத்தந்தை காட்டும் வழியில் நேர் மறை எண்ணங்களை விதைப்பது, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இன்றியமையாதது எனவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |